காம்பியாவில் இருமல் மருந்து குடித்து 66 குழந்தைகள் பலி: இந்திய மருந்து நிறுவனத் தயாரிப்புகள் குறித்து WHO எச்சரிக்கை

ஆப்பிரிக்க நாடான காம்பியாவில் இருமல் மருந்து குடித்து 66 குழந்தைகள் பலியான நிலையில் இந்திய மருந்து நிறுவனத் தயாரிப்புகள் குறித்து உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மெய்டன் ஃபார்மாசுட்டிகல்ஸ் என்ற இந்திய நிறுவனத்தின் தயாரிப்புகள் கூட இதற்குக் காரணமாக இருக்கலாம் என்று கூறப்படும் நிலையில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கெட்டுபோன மருந்துகள் மேற்கு ஆப்பிரிக்க நாடான காம்பியாவைத் தவிர வேறு சில நாடுகளுக்கும் ஏற்றுமதி ஆகியிருக்கலாம் என்பதால் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து உலக சுகாதார நிறுவனத் தலைவர் டெட்ரோஸ் அதோனம் கூறுகையில், காம்பியாவில் குழந்தைகள் இறப்புடன் 4 இருமல் மருந்துகளுக்கு தொடர்பு இருக்கலாம் என்று அறியப்படுகிறது. இந்த குறிப்பிட்ட 4 மருந்துகளால் சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் எனக் கருதப்படுகிறது. இந்த சிறு குழந்தைகளின் உயிரிழப்பு நெஞ்சைப் பிளக்கும் அளவுக்கு வேதனை தருகிறது. அவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆறுதலைத் தெரிவிக்கிறேன். சந்தேகத்துக்குரிய 4 இருமல் மருந்துகள் குறித்தும் இந்தியாவின் மெய்டன் ஃபார்மாசுட்டிக்கல்ஸ் லிமிடட் நிறுவனத்திடமும், இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டு ஒழுங்குமுறை ஆணையத்திடமும் விசாரணை மேற்கொண்டுள்ளோம் என்றார்.

மேலும்  ப்ரோமேதசைன் ஓரல் சல்யூஷன், கோஃபெக்ஸ்மாலின் பேபி காஃப் சிரப், மேக்காஃப் பேபி காஃப் சிரப் மற்றும் மேக்ரிப் என் கோல்டு சிரப் ஆகிய 4 மருந்துகளுமே  விசாரணை வளையத்திற்குள் வந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.