இலங்கை உட்பட 54 நாடுகளுக்கு உடனடி கடன் நிவாரணம் அவசியம்

இலங்கை மற்றும் பாகிஸ்தான் உட்பட 54 நாடுகளுக்கு உடனடி கடன் நிவாரணம் அளிப்பது அவசியமென்று ஐ.நா. அமைப்பு கூறியுள்ளது.

ஐக்கிய நாடுகள் மேம்பாட்டு திட்டம் நேற்றுமுன்தினம் ஒரு அறிக்கை வெளியிட்டது.

அதில் கூறப்பட்டிருப்பதாவது:-

உலகளவில் எண்ணற்ற வளரும் நாடுகள் கடுமையான கடன் பிரச்சினையில் சிக்கித் தவிக்கின்றன. இவற்றில் பெரும்பாலான நாடுகள், கொரோனா தொற்று ஆரம்பிப்பதற்கு முன்பே கடன் சுமையில் சிக்கி விட்டன.

இந்த ஏழை நாடுகள், பொருளாதார அழுத்தத்தை சந்தித்து வருகின்றன. இந்நாடுகள், வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியவில்லை. புதிதாக கடன் வாங்கவும் முடியவில்லை.

இவற்றில் இலங்கை, பாகிஸ்தான், துனிஷியா, சாத், சாம்பியா ஆகிய நாடுகள் உடனடி ஆபத்தை சந்திக்கும் நிலையிலுள்ளன. அவை உட்பட 54 நாடுகளுக்கு உடனடியாக கடன் நிவாரணம் அளிப்பது அவசியம்.

உடனடி நிவாரணம் கிடைக்காவிட்டால் அங்கு வறுமை அளவு உயரும். இதுபற்றி அடிக்கடி எச்சரிக்கை விடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அதனால் அபாயம் அதிகரித்து வருகிறது. இது ஏனைய நாடுகளுக்கும் பரவும் அச்சுறுத்தலும் உள்ளதென கூறப்பட்டுள்ளது.