469 பிலிப்பைன்ஸ் நாட்டவர்கள் மலேசியாவிலிருந்து நாடுகடத்தல் 

மலேசியாவின் சபா மாநிலத்தில் முறையான ஆவணங்களின்றி தங்கியிருந்த 469 பிலிப்பைன்ஸ் நாட்டவர்கள் அந்நாட்டின் சண்டகம் துறைமுகம் வழியாக நாடுகடத்தப்பட்டுள்ளனர். 

இவர்கள் சபா மாநிலத்தில் உள்ள Tawau குடிவரவுத் தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்தவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மலேசியாவின் சபா மாநில குடிவரவுத்துறை கணக்குப்படி, கடந்த ஜனவரி முதல் டிசம்பர் 8ம் தேதி வரை 5,394 வெளிநாட்டவர்கள் நாடுகடத்தப்பட்டிருக்கின்றனர்.

“மலேசியாவுக்குள் நுழைவதற்கு முன்பு, முறையான பயண ஆவணங்களும் சபா மாநிலத்தில் பணியாற்றுவதற்கான வேலை உரிமங்களும் இருப்பதை வெளிநாட்டவர்கள் உறுதிச் செய்து கொள்ள வேண்டும்,” என சபா குடிவரவுத்துறை இயக்குநர் சலியா தெரிவித்திருக்கிறார்.

ஆவணங்களற்ற குடியேறிகளை கண்டறியவும் அவர்களை நாடுகடத்தவும் மலேசியா உறுதியாக இருப்பதாக அவர் எச்சரித்திருக்கிறார்.