‘புலிகளின் மீள் எழுச்சி’ என்ற பெயரில் 45 இளைஞர்கள் 2 மாதங்களில் கைது; ரிஷாத் பதியுதீன்

புலிகளின் மீள் எழுச்சி
கடந்த 2 மாதங்களுக்குள்ளே 40,45 தமிழ் இளைஞர்கள் ”புலிகளின் மீள் எழுச்சி” என்ற தலைப்பில் கைது செய்யப்பட்டு பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழே தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள். இவர்கள் 20 வயது 22 வயது இளைஞர்களாகவுள்ளனர். 2009 ஆம் ஆண்டில் யுத்தம் முடிந்தபோது இவர்கள் 10 வயதைக் கொண்ட வர்களாகவே இருந்திருப்பார்கள்.எனவே எனவே இவர்கள் விடயத்தில் சட்டமாஅதிபர் திணைக்களம் கவனம் செலுத்தி அவர்களின் விடுதலைக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் வன்னி மாவட்ட எம்.பியுமான ரிஷாத் பதியுதீன் வேண்டுகோள் விடுத்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற நீதி அமைச்சு, சிறைச்சாலைகள் முகாமைத்துவம் மற்றும் சிறைக்கைதிகள் புனர்வாழ்வளிப்பு இராஜாங்க அமைச்சு ஆகியவற்றின் நிதி ஒதுக்கீடுகள் மீதான குழு நிலை விவாதத்தில் உரையாற்றிய போதே இந்த வேவேண்டுகோளை விடுத்த அவர் மேலும் கூறுகையில்,

நான் சிறையில் சில மாதங்கள் இருந்ததால் சிறைக்காவலர்களின் பிரச்சினைகளை அறிந்துகொண்டேன். பொலிஸார், இராணுவத்துடன் ஒப்பிடும்போது அவர்களுக்கு .சம்பளம் மிகக்குறைவாகவே உள்ளது. நாட்டில் 5000 வரையிலான சிறைக்காவலர்களே உள்ளனர். எனவே அவர்களின் சம்பளம் தொடர்பில் விசேட கவனம் செலுத்துமாறு கோருகின்றேன். அதேபோன்று சிறைச்சாலைகளின் வசதிகளைப் பார்க்கும்போது மிக மோசமாக இருக்கிறது. சிறையில் விடயத்திலும் கவனம் செலுத்த வேண்டும்.

பயங்கரவாத தடைச்சட்டம் தொடர்பிலும் கூற வேண்டியுள்ளது. 2009 ஆம் ஆண்டு 12000 வரையிலான போராளிகள் சரணடைந்தார்கள் அவர்கள் புனர்வாழ்வளிக்கப்பட்டு மீண்டும் சமூகத்துடன் இணைக்கப்பட்டார்கள். ஆனால் அதனைவிட சிறுசிறு காரணங்களினால் கைது செய்யப்பட்டு குற்றப்பத்திரிக்கை முன்வைக்கப்படாது பல தமிழ் இளைஞர்கள் சிறைகளில் பலவருடங்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.அவர்களின் விடுதலையில் கவனம் செலுத்துமாறு நீதி அமைச்சரிடம் வேண்டுகோள் விடுக்கின்றேன்.

அமைச்சர் நாமல் ராஜபக்ஷ கூட அண்மையில் இந்த விடயம் தொடர்பில் பேசியிருந்தபோது இந்த விடயத்தை நாம் கட்டம் கட்டமாக முன்னெடுப்போம் என்று கூறினார். நான் சிறையில் இருக்கும்போது அவர்கள் தமது வேதனைகளை என்னிடம் கூறினார்கள். எனவே அவர்களின் விடுதலை சம்பந்தமாக சட்டமாஅதிபர் திணைக்களத்திலே இன்னும் பல வழக்குகள் குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்படாமல் உள்ளன. பல இளைஞர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகவுள்ளது. எனவே இது சம்பந்தமாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

இதனை விட கடந்த 2 மாதங்களுக்குள்ளே 40,45 தமிழ் இளைஞர்கள் புலிகளின் மீள் எழுச்சி என்ற தலைப்பில் கைது செய்யப்பட்டு பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழே தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள். இவர்கள் 20 வயது 22 வயது இளைஞர்களாகவுள்ளனர். 2009 ஆம் ஆண்டில் இவர்கள் 10 வயதைக் கொண்டபவர்களாகவே இருந்திருப்பார்கள். இன்று இவர்கள் வட்ஸ் அப்பில் முகப்புத்தகத்தில் சில செய்திகளை பகிந்ததற்காக அவர்கள் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்தது வைக்கப்பட்டுள்ளார்கள் . இவர்களுக்கு வழக்கு பேச பணம் இல்லை. பெற்றோர்கள் கிளிநொச்சியில் முல்லைத்தீவில் மட்டக்களப்பில் என்று இருக்கின்றார்கள். எனவே இவர்கள் விடயத்தில் சட்டமாஅதிபர் திணைக்களம் கவனம் செலுத்தி அவர்களின் விடுதலைக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்

அதேபோன்றே இந்த நாட்டில் நடந்த உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் பலர் கைது செய்யப்பட்டார்கள். அதில் 40-45 பேருக்கு வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. ஏனையவர்கள் 250 பேர் மட்டில் வழக்கு தொடரப்படாமல் இரு வருடங்களுக்கு மேலாக சிறையில் வாடிக்கொண்டிருக்கின்றனர். அவர்களைப் பொறுத்த வரையில் ஒரு நாள் வகுப்புக்கு போனதாக சில சில செயலமர்வுகளில் பங்கு பற்றியதாக சிறு சிறு காரணகளுக்காக கைது செய்யப்பட்டு பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள். இவ்வாறானவர்களுக்கு பிணையாவது வழங்குவதுபற்றி நீங்கள் சிந்திக்க வேண்டும். ஏனெனில் இவர்கள் மீது ஆயிரக்கணக்கான குற்றச்ச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளதால் இவற்றை விசாரிக்க பல் வருடங்கள் செல்லலாம். எனவே இந்த விடயத்தில் கவனம் செலுத்த வேண்டும் என்றார்.

ilakku Weekly Epaper 159 December 05 2021 Ad ‘புலிகளின் மீள் எழுச்சி' என்ற பெயரில் 45 இளைஞர்கள் 2 மாதங்களில் கைது; ரிஷாத் பதியுதீன்