கிறீஸ்ஸில் இடம்பெற்ற தொடரூந்து விபத்து 43 பேர் பலி

கிறீஸ் நாட்டில் கடந்த செவ்வாய்கிழமை (28) இடம்பெற்ற தொடரூந்து விபத்தில் 43 பேர் கொல்லப்பட்டதுடன், பெருமளவானோர் காயமடைந்துள்ளனர்.

இந்த விபத்தை தொடர்ந்து கிறீஸ் நாட்டின் பயணத்துறை அமைச்சர் தனது பதவி துறந்ததுடன், கடந்த வியாழக்கிழமை (2) அங்கு ஒரு நாள் தொழில்புறக்கணிப்பில் தொடரூந்து பணியாளர்கள் ஈடுபட்டிருந்தனர்.

பெருமளவான தொடரூந்து பணியாளர்களும் இந்த விபத்தில் கொல்லப்பட்டுள்ளனர். மீட்பு பணியாளர்கள் வியாழக்கிழமை வரை தொடர்ந்து மீட்புப்பணிகளில் ஈடுபட்டிருந்தனர்.

கடந்த செவ்வாய்கிழமை (28) நள்ளிரவு 350 பயணிகளுடன் சென்ற தொரூந்து சரக்கு தொடரூந்து ஒன்றுடன் மோதியதால் இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளது. இரு வண்டிகளும் ஒரே பாதையில் பயணித்து நேருக்கு நேர் மோதியதால் கடுமையான சேதம் ஏற்பட்டதுடன், மோதல் இடம்பெற்ற பகுதியில் மிகப்பெரும் தீயும் ஏற்பட்டிருந்தது.

இந்த விபத்து ஏற்படுவதற்கு லறிசா பகுதியை சேர்ந்த தொடரூந்து நிலைய பொறுப்பதிகாரியின் கவலையீனமே காரணம் என தெரிவித்துள்ள கிறீஸ் அரசு அவர் மீது வழக்கு பதிவு செய்துள்ளது.

இந்த விபத்தில் கொல்லப்பட்டவர்களில் பெருமளவானோர் மாணவர்கள் மேலும் 10 பேர் காணாமல் போயுள்ளனர். பெருமளவான உடல்கள் தீயில் கருகியதால் பயணிகளின் குடும்ப உறுப்பினர்களின் மரபணுமாதிரிகளை வைத்தே காவல்துறையினர் உடல்களை அடையாளம் கண்டு வருகின்றனர்.