Tamil News
Home செய்திகள் கடலில் தத்தளித்த 4 இலங்கை மீனவர்கள் இந்திய கடலோர படையினரால் மீட்பு

கடலில் தத்தளித்த 4 இலங்கை மீனவர்கள் இந்திய கடலோர படையினரால் மீட்பு

அந்தமானை அண்டிய கடற்பகுதியில் தத்தளித்துக் கொண்டிருந்த இலங்கை மீன்பிடி படகிலிருந்து 4 மீனவர்களை இந்திய கடலோர காவல்படையினர் நேற்றுமுன்தினம் (28) மீட்டுள்ளனர்.

இவர்கள் இலங்கையிலிருந்து மீன்பிடிப்பதற்காக கடந்த செப்டெம்பர் 25 ஆம் திகதி படகில் கடலுக்குச் சென்றுள்ளனர். சீரற்ற காலநிலையினால் படகில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதாகவும் இதன் விளைவாக சுமார் இரண்டு மாதங்கள் (63 நாட்கள்) குறித்த படகு கடலில் காணாமல் போனதாகவும் தகவல் தரப்புகள் தெரிவித்தன.

அந்தமான் – நிக்கோபார் தீவுகளின் சிறிய தீவான கமோர்டாவுக்கு அருகில் சென்ற கப்பலில் நான்கு பேர் இருந்தனர். அப்பகுதியில் கடற்றொழிலில் ஈடுபட்டிருந்த உள்ளூர் மீனவர்கள் சிலர் சந்தேகத்திற்கிடமான நிலையில் இருந்த படகையும் அதில் நான்கு மீனவர்கள் உணவின்றி கடுமையாக நோய்வாய்ப்பட்டிருப்பதையும் அவதானித்துள்ளனர்.

பின்னர் குறித்த மீனவர்கள் இந்திய கடற்படையை தொடர்பு கொண்டு விடயத்தை தெரிவித்தனர். இதனையடுத்து இந்திய கடலோர காவல்படையின் படகு மூலம் தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இலங்கை மீனவர்களுக்கு முதலுதவி, உணவு மற்றும் குடிநீர் வழங்கப்பட்டு பின்னர் அவர்கள் பாதுகாப்பான இடத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். இது தொடர்பான உத்தியோகபூர்வ தகவல் இலங்கை தூதரகத்திற்கு வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Exit mobile version