2014 முதல் கட்டாரில் 343 இலங்கை பணியாளர்கள் மரணம்

2014 ஆம் ஆண்டு முதல் கட்டாரில் பணியாற்றிய 343 இலங்கை பணியாளர்கள் உயிரிழந்துள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் இறப்புக்கான காரணங்களாக இயற்கை மரணம், தற்கொலை, கொலை, வீதி விபத்துகள், ஏனைய விபத்துகள், கோவிட் இறப்புகள் மற்றும் உறுதிப்படுத்தப்படாதவை என பட்டியலிடப்பட்டுள்ளன.

அதற்கமைய, 2014 ஆம் ஆண்டு முதல் 207 இயற்கை மரணங்களும், தற்கொலைகளால் 30 மரணங்களும், வீட்டு வன்முறைகளால் 6 மரணங்களும், வீதி விபத்துக்களால் 50 மரணங்களும் , பிற விபத்துக்களால் 35 மரணங்களும், கோவிட் தொற்றினால் 14 மரணங்களும் மற்றும் ஒரு உறுதிப்படுத்தப்படாத மரணமும் பதிவாகியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த ஆண்டில், ஒக்டோபர் 31 ஆம் திகதி வரை 37 மரணங்கள் பதிவாகியுள்ளன. அத்துடன், 2021 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளில் முறையே 11 மற்றும் 3 கொவிட் மரணங்களும் பதிவாகியுள்ளன.

இந்த தகவல்களின் படி 2015 ஆம் ஆண்டில் அதிக எண்ணிக்கையிலான மரணங்கள் பதிவாகியுள்ளன.

இதில் 29 இயற்கை மரணங்களும், 4 தற்கொலைகளும், ஒரு கொலையும், 12 வீதி விபத்துகளும் , 6 பிற காரணிகளாலான மரணங்ளும் அடங்குகின்றன.

அத்துடன், 13 இயற்கை மரணங்கள், 2 தற்கொலை மரணங்கள், 3 கொலைகளும், இரண்டு விபத்துக்களும், ஒரு உறுதிப்படுத்தப்படாத மரணம் என 2020 ஆம் ஆண்டில் குறைவான மரணங்கள் பதிவாகியுள்ளதாக குறித்த தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.