20வது திருத்த சட்டத்தின் மூலம் ராஜபக்ச குடும்பத்திற்கே நன்மை -இராதாகிருஸ்ணன்

20வது திருத்த சட்டத்தின் மூலம்

20வது திருத்த சட்டத்தின் மூலம் ராஜபக்ச குடும்பத்திற்கே பல நன்மைகள் ஏற்பட்டிருக்கின்றது எனத் தெரிவித்த நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவரும், மலையக மக்கள் முன்னணியின் தலைவருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன், ஆனால் மக்களுக்கு எந்த நன்மையும் ஏற்படவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.   

இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த  பாராளுமன்ற உறுப்பினர் வேலுசாமி இராதாகிருஸ்ணன், “நல்லாட்சி அரசாங்கம் 19 வது திருத்த சட்டத்தை கொண்டு வந்து பாராளுமன்றத்திற்கு அதிகாரத்தை வழங்கியது. ஆனால் அந்த நல்லாட்சியில் எதுவும் சரியாக நடைபெறவில்லை அதற்கு காரணம் ஜனாதிபதிக்கு அதிகாரங்கள் இல்லாமையே என்று கூறி இந்த அரசாங்கம் 20 வது திருத்த சட்டத்தை கொண்டு வந்து ஜனாதிபதிக்கு எல்லா அதிகாரங்களையும் கொடுத்தது. எல்லா பிரச்சினைகளையும் ஒருவரால் தீர்த்துவிட முடியும் என்று கூறியே இந்த அதிகாரங்களை ஜனாதிபதிக்கு கொடுத்தது.

ஆனால் பிரச்சினைகள் தீர்ந்ததா? இல்லை எல்லா பிரச்சினைகளும் அதிகரித்துக் கொண்டே போகின்றது. எனவே இந்த 20வது திருத்த சட்டத்தின் மூலம் எந்தவிதமான பயனும் இல்லை என்பது நிரூபிக்கப்பட்டு விட்டது. இந்த அதிகாரத்தின் மூலமாக ஜனாதிபதியால் எதனையும் சாதிக்க முடியவில்லை. ஒரு விடயம் நடந்திருக்கின்றது, இந்த சட்டத்தின் மூலமாக ராஜபக்ச குடும்பத்திற்கு பல நன்மைகள் ஏற்பட்டிருக்கின்றது. ஆனால் மக்களுக்கு எந்த நன்மையும் ஏற்படவில்லை.

2019 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் நடைபெற்ற பொழுது அன்று அனைவரும் நினைத்தார்கள் இனிமேல் இந்த நாட்டில் அனைத்து பிரச்சினைகளும் தீர்ந்துவிடும் என்று நினைத்து அன்று 69 இலட்சம் மக்களும் வாக்களித்து இன்றைய ஜனாதிபதியையும் பிரதமரையும் தெரிவு செய்தார்கள்.

ஆனால் நாங்கள் மலையக மக்களுக்கு கூறினோம். எங்களுக்கு வாக்குரிமையை பெற்றுக் கொடுப்பதில் முக்கிய பங்கு வகித்தவர் மறைந்த ஜனாதிபதி ரணசிங்ஹ பிரேமதாச எனவே அவருடைய மகன் சஜித் பிரேமதாசவிற்கு எங்களுடைய வாக்குகளை வழங்க வேண்டும் என கேட்டுக் கொண்டோம். அதன்படி 60 வீதமான எங்களுடைய மக்கள் சஜித் பிரேமதாசவிற்கு வாக்களித்தார்கள். ஆனால் நாட்டில் ஏனைய பகுதியில் இருந்த மக்கள் செய்த தவறின் காரணமாக நாம் இன்று 40 வருடங்கள் பின்நோக்கி சென்றுவிட்டோம். மீண்டும் எல்லா பொருட்களுக்கும் வரிசையில் நிற்க வேண்டிய ஒரு நிலைமை ஏற்பட்டுள்ளது.

இன்று இந்த அரசாங்கத்தில் இருக்கின்ற அமைச்சர்களே இந்த அரசாங்கத்தை விமர்சனம் செய்கின்ற ஒரு நிலைமை ஏற்பட்டுள்ளது. நான் நினைக்கின்றேன் இன்று எதிர்கட்சியைவிட அரசாங்கத்தை அதிகம் விமர்சனம் செய்வது ஆளும் கட்சியின் அமைச்சர்களே.

இன்று அரசாங்கம் எந்த திட்டத்தை முன்வைத்தாலும் அதனை நடைமுறைபடுத்த முடியாத ஒரு நிலைமை ஏற்பட்டுள்ளது. அரசாங்கம் கட்டுப்பாட்டு விலையை பொருட்களுக்கு விதித்தாலும் அதனை யாரும் கண்டு கொள்வதில்லை. இன்று உரத்தின் விலை ஒரு மூடை 9000 ஆயிரமாக இருக்கின்றது. இந்த விலைக்கு உரத்தை வாங்கி விவசாயிகள் இலாபம் அடைய முடியுமா? இன்றைய மரக்கறிகளின் விலையை மக்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அதே போல அரிசியின் விலையையும் மக்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.

இன்று இலங்கையில் இருந்து அநேகமானவர்கள் வெளிநாடுகளுக்கு செல்வதற்கே முயற்சி செய்கின்றார்கள்.அநேகமாக அனைவரும் கடவுச் சீட்டை பெற்றுக் கொள்வதில் ஆர்வமாக இருக்கின்றார்கள்.

இலங்கைக்கு ஆபத்தின் பொழுது உதவுவது இந்தியா என்பதில் மாற்றுக் கருத்திற்கு இடமில்லை. ஆனால் அதே நேரத்தில் சீனாவும் எங்களுக்கு உதவி செய்கின்றது. அதற்காக அவர்கள் எங்களிடம் இருந்து எதையாவது எதிர்பார்க்கின்றார்கள். அது நடைமுறை ஏனென்றால் அவர்கள் கடன் கொடுக்கின்ற பொழுது எதனையாவது எதிர்பார்ப்பார்கள். ஏனென்றால் யாரும் யாரையும் நம்பி கொடுக்கின்ற ஒரு நிலைமை தற்பொழுது இல்லை.

எனவே நாம் எமது பொருளாதாரத்தை பாதுகாத்து கொள்ள வேண்டுமாக இருந்தால் நிச்சயமாக எதையாவது விட்டுக் கொடுக்க வேண்டிய ஒரு நிலைமையிலேயே நாங்கள் இருக்கின்றோம். எனவே நாங்கள் அனைவரும் இதனை புரிந்து கொள்ள வேண்டும்” என்றார்.

Tamil News