வேல்ஸ் இல் இருந்து அருஸ்
தோல்வியை சந்தித்த வருடங்களில் 2021: வழமைபோலவே தமிழ் மக்களின் ஏக்கங்கள் மற்றும் எதிர்பார்ப்புக்கள் எல்லாவற்றையும் தாண்டி, இந்த வருடமும் கடந்து போயுள்ளது. ஈழத்தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்கான தீர்வு, அங்கு பாதிக்கப்பட்ட மக்களுக்கான நீதி தேடுதல், தாயக மக்களின் மேம்பாடு மற்றும் அங்குள்ள மக்களினதும், தாயக பிரதேசங்களினதும் பாதுகாப்பு என்பன தொடர்பில் கடந்த ஒரு வருடத்தில் புலம்பெயர் தமிழ் சமூகம் என்ன நகர்வுகளை மேற்கொண்டது என்பது தொடர்பில் பார்ப்பதன் மூலம் நாம் எமது அடுத்த வருடத்திற்கான செயற்பாடுகளை செழுமைப்படுத்த முடியும்.
கடந்து செல்லும் இந்த வருடத்தில் மார்ச் மாதம் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் கொண்டுவரப்பட்ட 46/1 என்ற தீர்மானம் என்பது மேற்குலகத்தின் அனுசரணையுடன் அவர்களினால் திரட்டப்பட்ட நாடுகளின் ஆதரவுகளுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது.
அதில் இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பில் ஆதாரங்களைத் திரட்டுதல் மற்றும் அவற்றை பாதுகாத்தல் தொடர்பான பணிகளை முன்னெடுப்பது என்பது தொடர்பான விவகாரம் காத்திரமாக இடம்பெற்றுள்ளதுடன், அதற்கான நடவடிக்கையையும் அவர்கள் மேற்கொள்வதற்கான செயற்பாடுகளை ஆரம்பித்துள்ளனர்.
இந்த தீர்மானத்தில் 13 ஆவது திருத்தச்சட்டம் என்ற அரசியல் தீர்வை இந்தியா புகுத்தியுள்ளதுடன், அதனை அமெரிக்கா தலைமையிலான மேற்குலகம் ஏற்றுக்கொள்ளவும் செய்துள்ளது.
புலத்தில் இடம்பெற்ற இந்த விவகாரங்களில் புலம்பெயர் அமைப்புக்கள் மற்றும் செயற்பாட்டாளர்களின் செயற்பாடுகள் எவ்வாறு இருந்தது என்றால், அவர்களுடன் இணைந்து பணியாற்றும் நிலையை நாம் எட்டவில்லை என்பதே உண்மையானது.
விமர்சனங்களை முன்வைத்துவிட்டு கடந்து சென்றுள்ளோம். கிடைக்கும் சந்தர்ப்பங்களையும் தவறவிடுவதிலும் அவர்கள் சிறிதும் கவலை கொள்ளவில்லை.
எனினும் இந்தியாவின் அழுத்தத்துடன் 13 ஆவது திருத்தச்சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தி, அதில் உள்ள சொற்ப அதிகாரங்களையாவது தமிழ் மக்கள் பெறுவதன் மூலம், எமது தாயகத்தின் இருப்பை உறுதிப்படுத்தத் தேவையான சிறிய பணியையாவது முன்னெடுப்பதற்கான வேலைத்திட்டங்களை தாயகத்தில் உள்ள கட்சிகள் ஆரம்பித்துள்ளன.
தைத்திருநாளை மரபுரிமை வாரம் எனப் பிரகடனப்படுத்தும் நடவடிக்கைகளில் புலம்பெயர் தேசம் காத்திரமான நகர்வை மேற்கொண்டிருந்தாலும், அது ஈழத்தமிழர்களின் அரசியலில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தப்போவதில்லை என்பதை நாம் ஏற்றுக்கொண்டாக வேண்டும்.
இந்தியா, மலேசியா, சிங்கப்பூர் என உலகம் எங்கும் பரந்துவாழும் தமிழ் மக்களுக்கான அங்கீகாரம் அது. எமது மக்களின் அரசியலில் அது காத்திரமானதல்ல.
கனடாவில் கொண்டுவரப்பட்ட இனப்படுகொலை கற்கைவாரம் என்பது கனடாவில் வாழும் தமிழ் மக்களினாலும், அமைப்புக்களினாலும், அந்த நாட்டின் அரசில் அங்கம்வகிக்கும் அரசியல் செயற்பாட்டாளர்களினாலும் மேற்கொள்ளப்பட்ட முயற்சியின் பலனாகும். அது ஒரு காத்திரமான நிகழ்வாகவே இந்த ஆண்டில் பதிவு செய்யப்பட வேண்டும்.
அதற்கு அப்பால், 2021 ஆம் ஆண்டு கடந்து சென்ற நினைவு நாட்களானாலும், தமிழ் இனத்தின் முக்கியமான நிகழ்வுகளானாலும், பல அமைப்புக்கள் வழமைபோல அறிக்கைகளை வெளியிட்டன. புலம்பெயர் தேசத்தில் இயங்கும் அமைப்புக்கள் அனுசரணை வழங்கும் அந்த நாடுகளின் அரசியல் தலைவர்கள் வழமைபோல அறிக்கைகளையும், சமூகவலைத்தளங்களிலும் தமது பதிவுகளை வெளியிட்டனர். அதற்கு அப்பால் இலங்கை அரசு எந்தவிதமான அழுத்தங்களையும் அவர்களிடம் இருந்து எதிர்கொள்ளவில்லை.
அங்கு இருக்கும் அமைப்புக்களை ஒருங்கிணைத்து அதனை அனைத்துலக மட்டத்திற்கு கொண்டு செல்லும் பாரிய பொறுப்பு ஒன்று புலம்பெயர் தேசங்களில் வழும் தமிழ் மக்களிடம் உண்டு. ஆனால் அதனை நாம் மேற்கொள்ளவில்லை அல்லது அதில் எந்தவிதமான முன்னேற்றங்களும் எட்டப்படவில்லை என்பது வருத்தமானதே.
இலங்கை தொடர்பில் இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள பூகோள மாற்றத்தை பயன்படுத்திக் கொள்வதிலும் புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் வழமைபோல காலத்தை தவறவிட்டதாகவே இந்த ஆண்டும் கடந்து சென்றுள்ளது.
ஒரு சீரான மற்றும் தெளிவான வெளிவிவகாரக் கொள்கைகள் அற்ற நிலையில் ஒவ்வொரு தேசங்களிலும் உள்ள அமைப்புக்களும், அதன் தலைவர்களும் தாம் வாழும் நாட்டில் தமது அமைப்புக்களையும், தமது நலன்களையும் பாதுகாப்பதற்காக வெளியிடப்பட்ட அறிக்கைகள், விமர்சனங்கள் என்பன தமிழ் இனம் ஒரு தோல்விகண்ட வெளிவிகாரக் கொள்கையுடன் பயணிப்பதையே எடுத்துக் காண்பித்துள்ளது.
மிகப்பெரும் தேசங்கள் கூட எல்லா நாடுகளையும் அனுசரித்துப் பகைவர்களைத் தேடாது நண்பர்களைத் தேடி வரும் இந்த காலகட்டத்தில் எமது அமைப்புக்களும், செயற்பாட்டாளர்களும் தமிழ் இனத்திற்கு எந்தவித நன்மையும் செய்யாத நாடுகளுக்காக பிராந்திய வல்லரசுகளை எதிர்க்கத் துணிவது என்பது தமிழினத்திற்கான அழிவை அவர்களே தேடித்தருவதாகவே இந்த ஆண்டில் நாம் பார்த்து நின்றோம்.
காத்திரமான செயற்றிட்டங்களை முன்னெடுப்பதில் இளைய சமூகம் தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ளதை நாம் இந்த வருடத்தில் அதிகம் கணக்கூடியதாக இருப்பதே எமக்கு ஆறுதல் தரும் விடயமாகும்.
அதற்கு அப்பால் புலம்பெயர் அமைப்புக்கள் ஒருங்கிணைந்து செயற்பட வேண்டும் என்ற தமிழ் மக்களின் ஆவல் என்பது இந்த வருடத்திலும் கனவாகவே கடந்து போயுள்ளது. அது மட்டுமல்லாது, புலம்பெயர் தேசங்களில் உள்ள தமிழ் அரசியல்வாதிகளினாலும் தமிழ் மக்கள் தாயகத்தில் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் அனைத்துலகத்தின் கவனத்தை கொண்டுவருவதற்கான நடவடிக்கைகளில் எதனையும் முன்நகர்த்த முடியவில்லை என்பதும் வேதனையானது.
இந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்ட கருத்துக்கள் எமக்கு வேதனையைத் தருவதாக இருந்தாலும், அதனை உள்வாங்குவதன் மூலம் தான் அடுத்த வருடத்தில் நாம் என்ன நகர்வுகளை முன்னெடுக்க வேண்டும் என்ற தெளிவைப் பெறமுடியும். உண்மை என்பது கசப்பாக இருந்தாலும் அதனை ஏற்றுக்கொள்வதன் மூலம் தான் நாம் காலத்தை சரியாக பயன்படுத்திக் கொள்ள முடியும்.