சமூகப் பாதுகாப்பு வேலைத்திட்டத்துக்கு உலக வங்கியிடமிருந்து 200 மில்லியன் டொலர் கடனுதவி

சமூகத்தில் மிகவும் இடர்களுக்கு ஆளாகக் கூடிய குழுக்களைப் பாதுகாப்பதற்காக பலம்வாய்ந்த சமூகப் பாதுகாப்பு வலையமைப்பொன்றை நடைமுறைப்படுத்துவதற்குத் தேவையான படிமுறைகளை மேற்கொள்வது சர்வதேச நாணய நிதியத்தின் நீடிக்கப்பட்ட கடன்வசதி நிகழ்ச்சித்திட்டத்தில் முன்மொழியப்பட்டுள்ள செயற்பாடுகளில் முதன்மையான செயற்பாடாக அடையாளங் காணப்பட்டுள்ளது.

அதற்கமைய, திட்டமிடப்பட்டுள்ள சமூகப் பாதுகாப்புக் கருத்திட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்குவதற்காக 200 மில்லியன் டொலர் கடன்தொகையை வழங்குவதற்கு உலக வங்கி உடன்பாடு தெரிவித்துள்ளது.

இலக்காகக் கொள்ளப்பட்ட குடும்பங்களுக்கு நிதி நிவாரணம் வழங்கல், வறுமை மற்றும் இடர்களுக்கு ஆளாகின்றவர்களுக்கு வாய்ப்புக்களை மேம்படுத்துகின்ற முன்னோடி வேலைத்திட்டம் மற்றும் சமூகப் பாதுகாப்பு முறைமையை பலப்படுத்தல் போன்ற மூன்று கூறுகளின் கீழ் உத்தேசக் கருத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும்.

அதற்கமைய, குறித்த கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்தவும், அதற்கான நிதியைப் பெற்றுக்கொள்வதற்காக உலக வங்கியுடன் கடன் வசதிகள் பற்றிய பேச்சுவார்த்தையை நடாத்துவதற்கும் நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

v