நாடு இவ்வாறே போனால், இன்னும் 2 வருடங்களில் மீண்டுமொரு கடன் மறுசீரமைப்பொன்றை செய்ய வேண்டிய நிலை ஏற்படும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எதிர்வு கூறியுள்ளார்.
இப்பாகமுவ பிரதேசத்தில் நேற்று (03) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
‘IMF உடன்படிக்கை மூலம் நாட்டின் பொருளாதார நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன’. ‘தற்போதைய அரசாங்கம் எதிர்க்கட்சியில் இருந்தபோது, சர்வதேச நாணய நிதியத்தோடு புதியதொரு இணக்கப்பாட்டை ஏற்படுத்தி அதன் மூலம் மக்களுக்கு நிவாரணம் வழங்குவோம் என்று ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பொதுத் தேர்தலின் போது கூறியது’. ‘இப்போது முந்தைய அரசாங்கம் இணக்கப்பாடு கண்ட அதே ஒப்பந்தத்தை அதே வழியில் முன்னெடுத்து வருகின்றது’ என்று எதிர்க்கட்சித் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.
‘இவற்றுக்கு மத்தியில் கடன் மறுசீரமைப்பு நடவடிக்கையை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்கான பின்னணி உருவாக்கப்பட்டுள்ளதா? என அரசாங்கத்திடம் கேள்வி எழுப்புகிறேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
‘மக்களுக்கு உண்மையை வெளிப்படுத்துவது அரசாங்கத்தின் பொறுப்பாகும்’ என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
‘நாடு எதிர்கொள்ளும் உண்மையான யதார்த்தம் என்னவென்றால், நாட்டிற்கு வழங்கியுள்ள பல முக்கிய இலக்குகளை நாம் முடிக்க வேண்டும்’. ‘அவற்றில், விரைவான பொருளாதார வளர்ச்சி மற்றும் உயர் அரசாங்க வருவாயைப் பேணுதல் முக்கியமானதாகும்’.
‘தவறும் பட்சத்தில், இன்னும் 2-3 வருடங்களில் மற்றொரு கடன் மறுசீரமைப்பு திட்டத்திற்கு செல்ல வேண்டி ஏற்படும்’ என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
‘தற்போது அரிசி தட்டுப்பாடு, தேங்காய் தட்டுப்பாடு, உப்பு தட்டுப்பாடு, பொருட்களின் விலை உயர்வு மறுபுறம் வருமான வீழ்ச்சி என பன்முக நெருக்கடிகளை மக்கள் சந்தித்து வருகின்றனர்’.
‘இவ்வாறானதொரு நிலையில் தற்போதைய அரசாங்கம் மக்களை வாழவைப்பதற்காக எடுத்துள்ள நடவடிக்கைகள் மற்றும் பிரச்சினைகளுக்கான பதில்கள் என்பன நாட்டு மக்களை திருப்தியடையச் செய்துள்ளதா? என்றும் எதிர்க்கட்சித் தலைவர் இங்கு கேள்வி எழுப்பியுள்ளார்.