15 ஆசிய-பசிபிக் நாடுகள் கையெழுத்திட்ட, சீனாவுக்கு சாதகமான உலகின் மிகப்பெரிய வர்த்தக ஒப்பந்தம்

உலகின் மிகப் பெரிய வர்த்தக ஒப்பந்தமாகக் கருதப்படும், சீனாவிற்கு சாதகமான ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது. இதில் 15 ஆசிய – பசுபிக் நாடுகள், கடந்த 15ஆம் திகதி கையெழுத்திட்டுள்ளன. இதில் இந்தியா விலகிக் கொண்டது.

‘பிராந்திய விரிவான பொருளாதாரக் கூட்டமைப்பு’ (RCEB) என்ற அமைப்பில் சீனா, ஜப்பான், தென்கொரியா, நியூசிலாந்து, அவுஸ்திரேலியா, இந்தோனேசியா, மலேசியா, பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், தாய்லாந்து, புரூனே, வியட்நாம், லாவோஸ், மியான்மார், கம்போடியா ஆகிய 15 ஆசிய – பசுபிக் நாடுகள் இடம்பெற்றுள்ளன. கடந்த 8 ஆண்டுகளுக்கும் மேலாக, இந்த நாடுகளுக்கிடையே நடைபெற்ற பலகட்ட பேச்சுவார்த்தையின் பயனாக மிகப்பெரிய இந்த வர்த்தக ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளன.

இந்த ஒப்பந்தம் பற்றி சிங்கப்பூர் பிரதமர் லீ கருத்துத் தெரிவிக்கையில், “கொரோனா கால ஊரடங்கால் ஏற்பட்டுள்ள சர்வதேச அளவிலான பொருளாதார முடக்கத்தை இந்த ஒப்பந்தம் மீட்டெடுக்கும். உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாகவும், இக்கூட்டமைப்பின் வர்த்தகம் இருக்கும். ஒப்பந்தத்தின் பிரதிபலன் இன்னும் இரண்டு ஆண்டுகளில் தெரியும்” என்றார்.

ஆசிய – பசுபிக் பிராந்தியத்தில் முக்கிய பங்கு வகிக்கும் நாடு இந்தியா. ஆனால் இந்தக் கூட்டமைப்பின் பேச்சுவார்த்தையில் இருந்து கடந்த ஆண்டு வெளியேறியது. இதற்கான முக்கிய காரணம் சீனா தான் என்று கருதப்படுகின்றது. இந்த வர்த்தகக் கூட்டமைப்பை சீனா தனக்கு சாதகமாகக் கட்டுப்படுத்தக்கூடும். புரூனே, மலேசியா, பிலிப்பைன்ஸ், வியட்நாம் போன்ற நாடுகளை தனது இராணுவத் தளமாகக் கட்டமைப்பதற்காகவும், சீனா இதில் முயற்சி செய்யும். மேலும் கூட்டமைப்பில் உள்ள பல நாடுகள் பொருளாதார ரீதியாக சீனாவைச் சார்ந்துள்ளன. அத்துடன் ஏற்கனவே ஆசியான் வர்த்தகக் கூட்டமைப்பில் இந்தியா இருப்பதாலும் இதில் இணையவில்லை என்று கூறப்படுகின்றது. இந்த ஒப்பந்தத்தில் இந்தியா எப்போதும் இணையலாம் என்று இந்த அமைப்புத் தெரிவித்துள்ளது.