13 ‘பிளஸ்’ பற்றி பேசிக்கொண்டு 13 ‘மைனஸ்’ செயற்பாடுகள் – சந்திரகுமார் கண்டனம்

வடமாகாண சபையின் கீழுள்ள கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, மன்னார் ஆகிய மாவட்ட மருத்துவமனைகளை அமைச்சரவைத் தீர்மானத்தின் கீழ் மத்திய அரசின் கீழ் கொண்டு வர முற்படும் செயலானது முற்றிலும் தவறாகும். இது அதிகாரப் பரவலாக்குதலுக்கு எதிரானது என்பதோடு, உலக யதார்த்தத்துக்கும், இலங்கையின் இனப்பிரச்சினைத் தீர்வுக்கும் நெருக்கடியை ஏற்படுத்துவதாகும். ஆகவே இந்த முயற்சியை அரசாங்கம் கைவிட வேண்டும் என சமத்துவக் கட்சியின் பொதுச் செயலாளாரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான மு.சந்திரகுமார் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு நிரந்தர அரசியல் தீர்வு காணும் வகையில் அதிகாரப் பரவலாக்கம் பற்றியும் 13 பிளஸ் பற்றியும் பேசிக் கொண்டிருகின்ற வேளையில், அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தின் மூலமாகப் பகிர்ந்தளிக்கப்பட்ட அதிகாரத்துக்குட்ட வளங்களையும், அதிகாரங்களையும் மீளப் பெறுவது தவறானதாகும். வழங்கப்பட்ட அதிகாரங்களிலிருந்து காலத்திற்கு காலம் சிலவற்றை மீளப் பெற்றுக் கொள்வது எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று.

குறித்த மருத்துவமனைகளை மத்திய அரசு தனது நிதியூட்டத்தின் கீழ் மாகாணசபைகளுடன் இணைந்து செயற்பாடுகளை மேற்கொள்ளலாம். அதுவே சிறந்த வழியாகும். நாட்டின் இனப் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணப்பட வேண்டும் எனில் அதிகார பரவலாக்கம் அவசியமாகும். ஆனால் தற்போது இடம்பெறுகின்ற சம்பவங்கள் அதற்கு மாறானதாக காணப்படுகின்றன.

வடக்கில் உள்ள கிளிநொச்சி, முல்லைத்தீவு வவுனியா, மன்னார் மாவட்டங்களின் மாவட்ட வைத்தியசாலையினை மத்திய சுகாதார அமைச்சின் நிர்வாகத்திற்கு கீழ் கொண்டு வரும் யோசனையை சுகாதார அமைச்சர் கடந்த 14 ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் முன் வைத்த போது அதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கிய செய்தி கவலையினை ஏற்படுத்தியிருக்கிறது. இதனை நாம் கண்டிக்கிறோம்.

13 வது அரசியலமைப்புத் திருத்தத்தின் மூலம் மாகாண சபைகளுக்கு வழங்கப்பட்ட காணி பொலிஸ் அதிகாரங்கள் இன்று வரை மாகாணங்களுக்கு வழங்கப்படவில்லை. இந்த நிலையில் கல்வி, சுகாதாரம் போன்ற விடயத்திலும் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைப் பலவீனப்படுத்தப்படுவது ஏற்றுக் கொள்ள முடியாதது. மேலும் 13 வது திருத்தம் மூலம் வழங்கப்பட்ட அதிகாரம் ஒன்றை மத்திய அரசு மீளப்பெற வேண்டுமாயின் நாட்டில் உள்ள அனைத்து மாகாண சபைகளின் அனுமதி அல்லது அனைத்து மாகாண ஆளுநர்களின் அனுமதி பெறப்படல் வேண்டும். எனவே தற்போது மக்கள் பிரதிநிதிகளை கொண்ட மாகாண சபைகள் இன்மையால் ஆளுநர்கள் அனுமதியே முக்கியமானது. ஆகவே வடக்கு மாகாண ஆளுநர் இந்த விடயத்தில் இனத்தின் நலன் சார்ந்த தீர்மானங்களை நிறைவேற்ற வேண்டும்.

வடக்கில் பல பாடசாலைகளை தேசிய பாடசாலைகளாக மாற்றிய அரசு தற்போது வடக்கில் உள்ள நான்கு மாவட்ட வைத்தியசாலைகளையும் மத்திய அரசின் கீழ் கொண்டு சென்றுள்ளது என்பது மாகாணசபை முறையைப் பலவீனப்படுத்துவது மட்டுமல்ல, அதிகாரத்தைப் பகிர்ந்து பரவலாக்குவதற்குப் பதிலாக அதிகாரத்தை மத்தியில் குவிப்பதாகவே அமையும். இது உலக நடைமுறைக்கும் இலங்கையின் பன்மைத்துவ யதார்த்ததுக்கும் மாறானதாகும். இந்தத் தவறை அரசாங்கம் செய்யக் கூடாது. அப்படிச் செய்தால் அது இலங்கையை மேலும் பலவீனப்படுத்தும் முரண்களுக்கே வழிவகுக்கும் என்று கருதுகிறோம்” எனவும் தெரிவித்துள்ளார்.