11 தமிழ் இளைஞர்கள் கடத்தல் விவகாரம் – சட்டமா அதிபர் திணைக்களத்தின் முடிவு குறித்து சர்வதேச மன்னிப்புச் சபை கேள்வி

wasantha karannagoda 1 11 தமிழ் இளைஞர்கள் கடத்தல் விவகாரம் – சட்டமா அதிபர் திணைக்களத்தின் முடிவு குறித்து சர்வதேச மன்னிப்புச் சபை கேள்வி

தமிழ் இளைஞர்கள் கடத்தப்பட்டு, காணாமல் ஆக்கப்பட்டதாக கூறப்படும் வழக்கில் சட்டமா அதிபர் திணைக்களத்தின் முடிவு குறித்து தெளிவுபடுத்த வேண்டும் என சர்வதேச மன்னிப்புச் சபை கோரியுள்ளது.

“கடற்படை 11” என்ற வழக்கு 2008 -2009 இல் 11 தமிழ் இளைஞர்கள் கட்டாயமாக காணாமல் ஆக்கப்பட்டதைக் குறிக்கின்றது. இதில் மூத்த இராணுவத் தளபதிகள் சம்பந்தப் பட்டுள்ளனர்.

2018 ஓகஸ்ட் மாதம் குற்றவியல் புலனாய்வுத்துறை (சி.ஐ.டி) முக்கிய சந்தேக நபராக “நேவி சம்பத்” என்று  அழைக்கப்படும் லெப்டினன்ட் கமாண்டர் சந்தனா பிரசாத் ஹெட்டியாராச்சியை கைது செய்தது.

முக்கிய சந்தேக நபர்களில் ஒருவரை பாதுகாப்புத் துறை தலைமை அதிகாரி அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன பாதுகாத்தார் என்று சிஐடி குற்றம் சாட்டியது, மேலும் அவரை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது.

2009ம் ஆண்டு பெப்ரவரியில், இலங்கை கடற்படையின் முன்னாள் தளபதி அட்மிரல் வசந்த கரன்னகொட, இந்த வழக்கில் 14ஆவது சந்தேக நபராக பெயரிட்டப்பட்டார். அவர் கடற்படை வீரர்களால் கட்டாயமாக காணாமல் ஆக்கப்பட்டது குறித்து அறிந்திருந்தார் என்று குற்றம் சாட்டப்பட்டார்.

இந்நிலையில், 2021ம் ஓகஸ்ட் 4ம் நாள் சட்டமா அதிபர் திணைக்களம்,2008 மற்றும் 2009ஆம் ஆண்டுகளில் 11 இளைஞர்கள் கடத்தப்பட்ட வழக்கில் கரன்னகொடாவுக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை தொடர வேண்டாம் என்று கொழும்பு மேல் நீதிமன்றத்தின் சிறப்பு ட்ரயல் அட்பார் நீதிமன்றுக்கு அறிவித்துள்ளது.

இந்த நிலையில், இந்த விடயம் குறித்து கேள்வி எழுப்பியுள்ள சர்வதேச மன்னிப்புச் சபையின் ஆசிய – பசுபிக் பிராந்திய பணிப்பாளர் யாமினி மிஸ்ரா,  ”பல தசாப்தங்களாக பல்லாயிரக்கணக்கான மக்கள் வலுக் கட்டாயமாக  காணாமல் ஆக்கப்பட்ட பட்டியலில் உலகளவில் இரண்டாவது இடத்தில் இலங்கை உள்ளது.

இந்த நிலையில், இந்த வழக்கு ஏற்கனவே இலங்கை நீதிமன்றங்களில் விதிக்கப்பட்ட தடைகளால் தடைப் பட்டுள்ளது.  நேற்யை முடிவு பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு நீதி வழங்குவதில் மேலும் தாமதத்தை ஏற்படுத்தியுள்ளது.

சட்டமா அதிபர் திணைக்களம் அதன் முடிவிற்கான காரணங்களை விளக்க வேண்டும்.

மேலும் இலங்கை அதிகாரிகள் காணாமல்  ஆக்கப்பட்ட மற்றும் பாதிக்கப் பட்டவர்களுக்கும் உண்மை, நீதி மற்றும் இழப்பீடுகளை வழங்க வேண்டும்” என்றார்.

ilakku-weekly-epaper-140-july-25-2021