ஶ்ரீ ரங்கா உள்ளிட்ட 6 பேரின் வழக்கு விசாரணை ஜனவரிக்கு ஒத்தி வைப்பு

ஶ்ரீ ரங்கா உள்ளிட்ட 6 பேருக்கு எதிரான வழக்கு விசாரணை ஜனவரி 16ம் திகதிக்கு வவுனியா மேல் நீதிமன்றத்தால் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

வவுனியா செட்டிக்குளம் பகுதியில் 2011ம் ஆண்டு மார்ச் மாதம் 31ம் திகதி இடம்பெற்ற வாகன விபத்தில், ஸ்ரீரங்காவின் பாதுகாப்பு உத்தியோகத்தராக

கடமையாற்றிய, ஜயமினி புஸ்பகுமார எனும் பொலிஸ் கான்ஸ்டபிள் உயிரிழந்தார்.

உயிரிழந்த பொலிஸ் உத்தியோகத்தரே வாகனத்தைச் செலுத்தியதாக பொலிஸ் முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும், ஸ்ரீ ரங்காவே வாகனத்தைச் செலுத்தியதாகவும் பொலிஸ் உத்தியோகத்தர் வாகனத்தின் முன் ஆசனத்தில் அமர்ந்திருந்தார் எனவும் விசாரணைகளிலிருந்து தெரியவந்தது.

அதனைத் தொடர்ந்து, இறந்த பொலிஸ் உத்தியோகத்தரின் மனைவியினால் பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.

பொலிஸ் தலைமையகத்தின் விசேட விசாரணைப் பிரிவினால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு அதன் மூலம் சட்ட மாஅதிபர் திணைக்களத்தின் ஆலோசனைக்கமைய ஶ்ரீ ரங்கா உள்ளிட்டோரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு தெரிவிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து கடந்த 18.10.2019ம் திகதி குறித்த 6 பேரும் நீதிமன்றில் ஆஜராகி பிணையில் விடுவிக்கப்பட்டிருந்ததுடன் குறித்த வழக்கு நேற்றையதினம் மீண்டும் வவுனியா மேல் நீதிமன்றத்தில் விசாரணைகளுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன் போது வழக்கினை எதிர்வரும் ஜனவரி மாதம் 16ம் திகதிக்கு ஒத்தி வைக்குமாறு வவுனியா மேல் நீதிமன்ற நீதவான் உத்தரவு பிறப்பித்தார்.