Tamil News
Home செய்திகள் சைபர் தாக்குதலின் பின்னணி என்ன? குழப்பத்தில் சிறிலங்கா அரசு

சைபர் தாக்குதலின் பின்னணி என்ன? குழப்பத்தில் சிறிலங்கா அரசு

சிறிலங்காவில் பிரபல இணையத்தளங்கள் மீது நேற்றைய தினம் சைபர் தாக்குதல் நடத்தப்பட்டதாக கணினி அவசர தயார் குழு தெரிவிக்கின்றது. நேற்றைய தினம் இவ்வாறான தாக்குதல் நடத்தப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டு, பாதுகாப்பு நடைமுறைகள் பலப்படுத்தப்பட்டிருந்த நிலையிலேயே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கின்றது. இத்தாக்குதல் அரச தரப்பை குழப்பத்தில் ஆழ்த்தியிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

சிறிலங்காவின் பிரபல செய்தி இணையத்தளம், சீனாவில் உள்ள இலங்கைத் தூதரகம் உள்ளிட்ட ஐந்து இணையத்தளங்களின் மீதே இந்த சைபர் தாக்குதல் நேற்று அதிகாலை நடத்தப்பட்டுள்ளது. இலங்கையின் உள்நாட்டு யுத்தம்

நிறைவு பெற்று நேற்றுடன் 11 வருடங்கள் பூர்த்தியாகிய நிலையில், தமிழீழம் சைபர் படை என அடையாளப்படுத்தும் குழுவொன்றினால் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. நேற்று காலை நடத்தப்பட்ட இந்த சைபர் தாக்குதல் காரணமாக சில மணிநேரத்திற்கு இணையத்தளங்களின் செயற்படுகள் தடைப்பட்டது.

எனினும், சைபர் தாக்குதலுக்கு இலக்கான இணையத்தளங்கள் சிறிது நேரத்தின் பின்னர் வழமைக்கு கொண்டு வரப்பட்டதாக இணையத்தள உரிமையாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். குறிப்பாக மே மாதம் 18ஆம் திகதி கடந்த சில வருடங்களாகவே இந்த சைபர் தாக்குதல் நடத்தப்பட்டு வருவதை அவதானிக்க முடிகின்றது.

கடந்த ஆண்டும் சுமார் 10 இணையத்தளங்களின் மீது இந்த சைபர் தாக்குதல் நடத்தப்பட்டிருந்ததை அவதானிக்க முடிந்தது. எவ்வாறாயினும், இந்த முறை இவ்வாறான சைபர் தாக்குதல்களை கட்டுப்படுத்தும் நோக்குடன் ஒரு குழுவொன்று ஸ்தாபிக்கப்பட்டதாக இலங்கை கணினி அவசர தயார் குழுவின் தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் தீனதயாளன் நாகரத்னம் தெரிவித்தார்.

இலங்கை கணினி அவசர தயார் குழு, இலங்கை விமானப்படையின் சைபர் பிரிவு மற்றும் இணையத்தள வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கும் நிறுவனங்களின் அதிகாரிகளையும் ஒன்றிணைத்து இந்த குழு தயார்ப்படுத்தப்பட்டிருந்ததாக தீனதயாளன் கூறுகின்றார்.

இந்த ஆண்டும் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறும் என தாம் முன்னதாகவே எதிர்பார்த்திருந்ததாக கூறிய அவர், அதனை தடுத்து நிறுத்த பல முன் ஆயத்தங்களை மேற்கொண்டிருந்ததாகவும் சுட்டிக்காட்டினார். மே மாதம் 18ஆம் தேதி இந்த சைபர் தாக்குதல் நடத்தப்படுவதற்கான பிரதான காரணம், ஒரு குழுவின் பிரபல்யத்தை உறுதிப்படுத்துவதற்கு எனவும் அவர் கூறியுள்ளார்.

அதனால், குறித்த நபர்கள் தொடர்பிலான தகவல்களை வெளியிடாதிருப்பதே சிறந்தது என அவர் தெரிவிக்கின்றார். இணையத்தளங்களிலுள்ள சில குறைப்பாடுகளினாலேயே இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருவதாக இலங்கை கணினி அவசர தயார் குழுவின் தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் தீனதயாளன் நாகரத்னம் தெரிவிக்கின்றார்.

புதிய தொழில்நுட்பங்கள் அறிமுகப்படுத்தப்படுகின்ற சந்தர்ப்பங்களிலேயே, இணையத்தளங்களை புதுபித்து வருவோமேயானால் இவ்வாறான சைபர் தாக்குதல்களிலிருந்து பாதுகாத்துக்கொள்ள முடியும் என அவர் குறிப்பிடுகின்றார். எவ்வாறாயினும், தாம் தொடர்ந்தும் இவ்வாறான விடயங்கள் குறித்து ஆராய்ந்து வருவதாக தீனதயாளம் நாகரத்னம் கூறினார்.

Exit mobile version