Tamil News
Home செய்திகள் வெடுக்குநாறிமலையில் கோவில்கள் எதுவும் இல்லை – அமைச்சா் டிரான்

வெடுக்குநாறிமலையில் கோவில்கள் எதுவும் இல்லை – அமைச்சா் டிரான்

“வெடுக்குநாறி மலையில் கோயில்கள் ஏதும் கிடையாது. வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள பௌத்த மரபுரிமை இடங்களில் முறையற்ற வகையில் செயற்படுபவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுவார்கள்” என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீதான மூன்றாம் நாள் விவாதத்தில் உரையாற்றும் போது மேற்கண்டவாறு தெரிவித்தார்.

“நிகழ்நிலை காப்புச் சட்ட வரைபு 2016 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்டது. நிகழ்நிலைகளில் இடம்பெறும் வன்முறை மற்றும் மோசடிகளை கருத்திற் கொண்டு இச்சட்டம் விரைவாக இயற்றப்பட்டது. உயர் நீதிமன்றத்தின் திருத்தங்களுடன் இந்த சட்டம் இயற்றப்பட்டுள்ளதை சட்டமா அதிபர் உறுதிப்படுத்தியுள்ளார். இதன் பின்னரும் ஏன் இந்த சட்டத்தை எதிர்க்கிறார்கள் என்பதை அறியமுடியவில்லை.

இந்த விவாதத்தில் வெடுக்குநாறிமலை பற்றி பேசப்பட்டது. கோயிலுக்கு சென்றவர்கள் கைது செய்யப்பட்டதாகவும் குறிப்பிடப்படுகிறது. வெடுக்குநாறி மலையில் எந்த கோயில்களும் இல்லை என்பதை தெளிவாக குறிப்பிடுகிறேன். இந்த மலையை தொல்பொருள் திணைக்களம் அநுராதபுர யுகத்துக்கு சொந்தமான தொல்பொருள் மரபுரிமைகள் உள்ள பகுதியாக அடையாளப்படுத்தியுள்ளது.

பௌத்த மத மரபுரிமைகள் உள்ள பகுதியில் பிறிதொரு தரப்பினர் தமது மத வழிபாடுகளை முன்னெடுக்கும் போது முரண்பாடுகளே தோற்றம் பெறும். 2023 ஆம் ஆண்டு இந்த மலையில் சட்டவிரோதமான முறையில் சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்ததும் பிரச்சினைகள் தோற்றம் பெற்றன. மார்ச் 04 ஆம் திகதி மதிமுகராசா என்ற பூசகர் வெடுக்குநாறி மலையில் பூஜை வழிபாட்டில் ஈடுபட வவுனியா நீதவான் நீதிமன்றில் அனுமதி கோரியுள்ளார்.

வெடுக்குநாறிமாலையில் இரவு 08 மணிவரை தங்யிருந்தவர்கள் அடுப்பு பற்ற வைத்து சட்டவிரோதமான முறையில் செயற்பட முற்படுகையில் தொல்பொருள் திணைக்களம் மற்றும் வனஜீவராசிகள் திணைக்களம் இச்செயற்பாட்டை தடுத்து நிறுத்துமாறு பொலிஸாரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். இதன் பின்னரே 08 பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்” என்றும் அமைச்சா் ரிரான் அலஸ் தெரிவித்தாா்.

Exit mobile version