போராட்டத்தைக் கைவிட மறுக்கும் விவசாயிகள், எல்லைகளில் பாதுகாப்பு படையினர் குவிப்பு

காசிப்பூர், சிங்கு எல்லை பகுதியில் விவசாயிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் அங்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு கொண்டுவந்த வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லி – உத்திரப் பிரதேச எல்லையான காசிப்பூர் எல்லையில் நவம்பர் மாதம் முதல் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் மத்திய அரசு வேளாண் சட்டங்களை திரும்ப பெறும் வரை தங்களின் போராட்டத்திலிருந்து பின்வாங்க போவதில்லை என விவசாயிகள் அறிவித்துள்ளனர்.

ஜனவரி 28ம் திகதியன்று காசிப்பூர் எல்லையில் போராட்டத்தில் ஈடுபடும் விவசாயிகளை கலைந்துபோக உள்ளூர் நிர்வாகம்  வலியுறுத்திய போதும்,   பாரதிய கிசான் யூனியன் எனும் வேளாண் அமைப்பின் தலைவர் ராகேஷ் திகைத் போராட்டத்தை கலைக்க மறுத்துவிட்டார்.

இந் நிலையில், சிங்கு, காசிப்பூர், டிகிரி எல்லையில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

“காசிப்பூர் எல்லையில் பேசிய விவசாய தலைவர், “நாங்கள் போராட்டத்தை கலைக்க மாட்டோம். எங்களது பிரச்னைகள் குறித்து அரசிடம் பேசுவோம்,” என்றார்.

மேலும் சிங்கு எல்லையில் இருக்கும் கிசான் மஸ்தூர் சங்கர்ஷ் சமிடி என்ற விவசாய அமைப்பின் தலைவர் சத்னம் சிங் பன்னு,”அரசு என்ன செய்தாலும் நாங்கள் இங்கிருந்து செல்ல மாட்டோம். மத்திய வேளாண் சட்டம் திரும்பப் பெற வேண்டும்.” என தெரிவித்துள்ளார்.

இதனிடையே ஜனவரி 26ஆம் தேதி நடந்த வன்முறைச் சம்பவங்களின் போது பல கோடி ரூபாய் மதிப்புள்ள பொதுச் சொத்துகள் வன்முறைக் கும்பலால் சேதப்படுத்தப்பட்டது என்றும் பணியில் ஈடுபட்டிருந்த 394 காவல்துறையினர் காயம் அடைந்தனர் என்றும் டெல்லி காவல்துறை நேற்று தெரிவித்திருந்தது.

டெல்லி காவல்துறை இந்திய அரசின் உள்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ளது குறிப்பிடத்தக்கது.