விடுதலைப் புலிகளின் பாடலை விற்ற இருவரில் ஒருவருக்கு கிடைத்த மகிழ்ச்சியான செய்தி

தமிழீழ விடுதலைப் புலிகளின் எழுச்சிப் பாடல்கள் அடங்கிய இறுவட்டை விற்பனை செய்தார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஒருவர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

விஸ்வமடுவைச் சேர்ந்த அழகுசாதனக் கடை உரிமையாளரான கந்தசாமி அரிகரன் என்பவரே பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

சந்தேகநபரை பிணையில் செல்ல கிளிநொச்சி நீதிவான் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளது.

கிளிநொச்சி, தருமபுரம் பகுதியில் விடுதலைப் புலிகளின் எழுச்சிப் பாடல்கள் அடங்கிய இறுவட்டை விற்பனை செய்தமை மற்றும் அதனை வாங்கி ஒலிக்கச் செய்தமை என இரண்டு பேர் 2019ஆம் ஆண்டு ஜனவரி 14ஆம் திகதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் சந்தேகநபர்கள் இருவரும் கடந்த ஒரு வருடமாக தொடர்ச்சியாக விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.

சந்தேகநபர்களில் ஒருவரான அரிகரனின் விடுதலை தொடர்பில் அவரது உறவினர்கள் சட்டத்தரணி கலாநிதி குமாரவடிவேல் குருபரன் ஊடாக நடவடிக்கை எடுத்திருந்தனர்.

அதனடிப்படையில் ஒரு வருடத்துக்கு பின்னர் சந்தேகநபர் கந்தசாமி அரிகரன் கிளிநொச்சி நீதிவான் நீதிமன்றால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை, தமிழீழ விடுதலைப் புலிகளின் எழுச்சிப் பாடல்களை ஒலிக்கவிட்டார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு மற்றைய சந்தேநபரான குணபாலசிங்கம் குணசீலன் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

அவர் சார்பில் சட்டத்துறை அமைப்பு ஒன்றால் உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமை மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் அவரை பிணையில் விடுவிக்கும் அறிவுறுத்தல் சட்ட மா அதிபரால் வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.