விக்னேஸ்வரன் அணியிலிருந்து விலகிய ஐங்கரநேசன் தனித்து போட்டியிட முடிவு

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் முன்னாள் வடமாகாண முதலமைச்சரின் கட்சியிலிருந்து பிரிந்து சென்று தனியாக போட்டியிடுவதற்கு வடமாகாண முன்னாள் விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் முடிவு செய்துள்ளதாக அறியப்படுகின்றது.

இந்நிலையில், தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் தலைவர் சித்தார்த்தனைத் தொடர்பு கொண்ட ஐங்கரநேசன், அக்கட்சிக்கு யாழ்ப்பாண மாவட்டத்தில் ஒதுக்கப்பட்டுள்ள இரண்டு ஆசனங்களில் ஒன்றை தனக்குத் தருமாறு கோரியிருக்கின்றார்.

ஆனால் இதற்கு சாதகமான பதிலை சித்தார்த்தன் வழங்கவில்லை. தான் கொழும்பில் இருப்பதாலும், யாழ்ப்பாணம் வரும் போது நேரில் சந்தித்துப் பேசுவோம் என்றும் கூறியுள்ளார்.

இதற்கிடையில் ஐங்கரநேசனுக்கும், சுமந்திரனுக்கும் இடையில் முறுகல் நிலை இருந்து வந்தது அனைவரும் அறிந்ததே. ஐங்கரநேசன் ஊழல்வாதி, அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வடமாகாண சபையில் அப்போதைய முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் அணியினர் அழுத்தம் கொடுத்து, மாகாண சபையை முடக்கியிருந்தனர்.

இதேவேளை சித்தார்த்தன் ஐங்கரநேசனுக்கு ஆசனம் ஒன்றை வழங்க சம்மதித்தாலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் அவர் போட்டியிடுவதற்கு சுமந்திரனின் அனுமதி கிடைக்கா விட்டால் ஐங்கரநேசன் நினைத்தது நடக்காது என்று அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.