Tamil News
Home செய்திகள் விக்னேஸ்வரனை உடனடியாக கைது செய்க! குற்ற விசாரணை திணைக்களத்தை நாடும் சிங்கள அமைப்பு

விக்னேஸ்வரனை உடனடியாக கைது செய்க! குற்ற விசாரணை திணைக்களத்தை நாடும் சிங்கள அமைப்பு

வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் க.வி. விக்னேஸ்வரை கைது செய்யுமாறு பொலிஸ் தலைமையகம் மற்றும் குற்ற விசாரணை திணைக்களத்திடம் சிங்கள தேசிய அமைப்பு தெரிவித்துள்ளது.

“ இலங்கையை ஒரு பௌத்த நாடாக அடையாளப்படுத்துவதற்கு எவருக்கும் அதிகாரம் இல்லை ” என வடமாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமுமான க.வி.விக்னேஸ்வரன் நேற்றைய தினம் தெரிவித்திருந்தார்.

இது தொடர்பில் கருத்து வெளியிட்டிருந்த விக்னேஸ்வரன்,

மகாவம்சம் போன்ற வரலாற்று நூல்கள் பாலி மொழியில் எழுதப்பட்ட புனைகதைகள் என அவர் சுட்டிக்காட்டியிருந்தார். இலங்கை பௌத்த நாடு என அர்த்தப்படுத்துவது முற்றிலும் தவறான விடயம். பாலி மொழி மூலம் புனைகதைகளை உருவாக்கி பௌத்த தேரர்களால் சிங்கள சமூகத்திற்கு தவறான விளக்கங்கள் வழங்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.

சிங்கள வரலாறுகள் முதல் பௌத்த தேரர்கள் வரை போலியான புனைகதைகளை கட்டியெழுப்புவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் இலங்கையில் வடக்கு கிழக்கு பிரதேசங்களில் எந்தவொரு சிங்கள பௌத்தரும் வசிக்கவில்லை எனவும் அவர் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் விக்னேஸ்வரின் கருத்துக்கு கடும் எதிர்ப்பை வெளியிட்டிருக்கும் சிங்கள தேசிய அமைப்பு, இது தொடர்பில் பொலிஸ் தலைமையகம் மற்றும் குற்ற விசாரணை திணைக்களத்திடம் முறைப்பாட்டினை பதிவு செய்திருக்கிறது.

இது தொடர்பில் கருத்துரைத்துள்ள அந்த அமைப்பு, இலங்கை எந்தவொரு விதத்திலும் சிங்களவர்களின் பூர்வீகம் அல்லவென்றும், இலங்கையின் பூர்வீக மக்கள் தமிழர்களே என்ற காரணத்தினால் இலங்கையில் தமிழ் பௌத்தர்கள் வாழ்ந்து வந்துள்ளதாக க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ள கருத்தை தாம் வன்மையாக கண்டிக்கிறோம்.

தேசிய நல்லிணக்கதிற்கும் நாட்டு மக்களின் ஒற்றுமையை சீர்குலைக்கவும் செயற்படும் விக்னேஸ்வரனை உடனடியாக கைது செய்ய வேண்டும். இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கேட்டுக்கொள்கிறோம் என்று குறிப்பிட்டுள்ளது.

Exit mobile version