Tamil News
Home செய்திகள் விகிதாசார தேர்தல் முறைமை மாற்றப்பட்டால் சிதறி வாழும் சிறுபான்மையினர் பிரதிநிதித்துவம் இல்லாமல் போய்விடும் – மனோ

விகிதாசார தேர்தல் முறைமை மாற்றப்பட்டால் சிதறி வாழும் சிறுபான்மையினர் பிரதிநிதித்துவம் இல்லாமல் போய்விடும் – மனோ

விகிதாசார தேர்தல் முறைமை மாற்றப்பட்டால் சிதறி வாழும் சிறுபான்மையினர் பிரதிநிதித்துவம் இல்லாமல் போய்விடும் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது:

“வடக்கு கிழக்குக்கு வெளியே 50 விகித தமிழரும், 65 விகித முஸ்லிம்களும், தென்னிலங்கை மாவட்டங்களில் சிதறி வாழ்கிறார்கள். இன்றைய விகிதாசார தேர்தல் முறைமை மாற்றப்பட்டால், இந்த மக்களின் பிரதிநிதித்துவங்கள் சரிபாதிக்கு மேல் மாகாணசபைகளிலும், பாராளுமன்றத்திலும் குறைந்து விடும்.

அதேபோல், அம்பாறையில் தமிழரும், மட்டக்களப்பில் முஸ்லிம்களும் வெற்றிபெறுவதுகூட கடினமாகிவிடும். திருகோணமலையிலும், வன்னியிலும் கூட இன்றுள்ள ஒழுங்கு மாறும். இது நடந்தால், இவை நடக்கும் என்பதை எழுதி வைத்துக்கொள்ளுங்கள்.

பெரும்பான்மை கட்சிகள் ஒருபோதும் நேர்மையாக நடக்காது. ஆகவே, பெரும்பான்மை கட்சிகளுடன் கூட்டு சேர்ந்து போட்டியிட்டு, அவர்களுக்கு சிதறி கிடக்கும் தமிழ், முஸ்லிம் வாக்குகளை வாங்கி கொடுத்து விட்டு, பிறகு பட்டியலில் நியமனம் கிடைக்கும் என எதிர்பார்ப்பது இலவுகாத்த கிளியின் கதையாகி விடும்.

ஒருபோதும், பெரும்பான்மை கட்சிகளும், பெரும்பான்மை அதிகார வர்க்கமும், தனித்தமிழ் தொகுதிகளை நுவரேலியா மாவட்டத்துக்கு வெளியே உருவாக்க உடன்படாது. அடுத்தது, பல அங்கத்தவர் தொகுதிகளையும், நிலத்தொடர்பற்ற தனித்தமிழ் தொகுதிகளையும் புதிதாக உருவாக்க ஒருபோதும் இடமில்லை. இது வெறுங்கனவு.

இன்றைய முறையில், இன்று கடைசியாக மாகாணசபைகளில், பாராளுமன்றத்தில், இருக்கின்ற தமிழ், முஸ்லிம் பிரதிநிதித்துவங்களை குறைந்தபட்ச அளவுகோலாக கொண்டு அவற்றை உறுதிப்படுத்த, மாற்று யோசனையை தரும்படி பெரும்பான்மை கட்சிகளை நாம் கூட்டாக எழுத்து மூலம் கோர வேண்டும். பட்டியல் நியமனங்களை ஒருபோதும் கணக்கில் எடுக்க முடியாது என்பதையும் அறிவிக்க வேண்டும்.

மாறாக, நாமே தொகுதி முறைமையை ஏற்றுக்கொண்டு, 60:40 என்றும், 70:30 என்றும் மாற்று யோசனைகளை முன் வைப்பது முறையாகாது. ஒருசிலரின் இந்த அரசியல் அதிக பிரசங்கித்தனம், நமது இனத்தை நிரந்தர அபாயத்தில் போட்டு விடும்.

அனைவரும் ஏற்றுக்கொள்ளும் நியாயமான முறைமை முன்வைக்க முடியாவிட்டால், இன்றைய அதே விகிதாசார முறைமையை அடிப்படையாக கொண்டு, இன்றைய தேர்தல் மாவட்டங்களை ஜனத்தொகைக்கு ஏற்ப, இரண்டு, மூன்றாக பிரிக்கும், “வலய தேர்தல் முறைமை” யை நாம் மாற்று யோசனையாக முன் வைக்க வேண்டும்.

இது புதிதல்ல. ஏற்கனவே, நமது அரசியலமைப்பில் 14ம் திருத்தமாக கொண்டுவந்து விட்டு நடைமுறைப்படுத்தாமல் விடப்பட்டதாகும். இது எமது அரசியல் இருப்பு தொடர்பான பிரச்சினை. தமிழ், முஸ்லிம் மக்களின் நியாயமான பிரதிநிதித்துவங்களை ஒழிக்க ஒருதலைபட்சமாக பெரும்பான்மை அரசாங்கம் நடவடிக்கை எடுக்குமாயின் அது உச்சகட்ட பேரினவாதம்.

பேரினவாதத்துக்கு அடிபணிந்து, எமது இனத்தின் பிரதிநிதித்துவங்களை விட்டுக்க்கொடுத்துவிட்டோம், என்ற எதிர்காலத்தின் பழிச்சொல்லுக்கு நாம் ஆளாக கூடாது. அடாவடியான தேர்தல் முறை மாற்றத்துக்கு எதிராக தேசிய, சர்வதேசிய போராட்டங்களை நாம் முன்னெடுக்க, ஆளும்கட்சி, எதிர்க்கட்சி பேதங்களை கலைந்து விட்டு, தமிழ் பேசும் அரசியலர் முன்வர வேண்டும்.

இந்த தேர்தல் முறைமை சீர்திருத்த கலந்துரையாடல்களில் கடந்த பத்து வருடங்களுக்கு மேல் தொடர்புற்றவன் என்ற முறையில் நான் இதை கூறுகிறேன்.

Exit mobile version