வவுனியா ஈச்சங்குளம் கிராமசேவையாளர் பிரிவுக்குட்பட்ட கள்ளிக்குளம் விவசாயக்குளம் நேற்றிரவு 10 மணியளவில் உடைப்பெடுத்ததன் காரணமாக குளத்தின் கீழ் விதைக்கப்பட்டு அறுவடைக்காலம் நெருங்கிய நெற்பயிர்கள் நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளதால் விவசாயிகள் பாரியளவில் நஷ்டமடைந்துள்ளனர்.
2011 ஆம் ஆண்டு புனரமைக்கப்பட்ட கள்ளிக்குளத்தில் இம்முறை அதிகளவு மழைவீழ்ச்சி காரணமாக குளம் நீரினால் நிரம்பிக் காணப்பட்டது. இந் நிலையில் குளக்கட்டில் சிறியளவு துவாரத்தின் ஊடாக நீர்கசிந்து படிப்படியாக அரிக்கப்பட்டு நேற்றிரவு உடைப்பெடுத்துள்ளது.
இதனால் 120 ஏக்கர் பரப்புடைய நெற்பயிர்ச் செய்கை பாதிக்கப்பட்டுள்ளது. ஒரு ஏக்கர் நெற்செய்கைக்கு சுமார் 35,000 தொடக்கம் 40 ஆயிரம் ரூபாய்வரை செலவு செய்து பயனடையவிருக்கும் சந்தர்ப்பத்தில் இவ்வாறு நெற்செய்கை பாதிப்படைந்ததால் தாம் பல்வேறு நெருக்கடிகளுக்குள் சிக்கியுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.