வவுனியா – புளியங்குளம் பகுதியில் நேற்று இரவு மேற்கொண்ட சோதனை நடவடிக்கையில் 5 கிலோகிராம் கேரளா கஞ்சாவுடன் மூவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
ஓமந்தை, புளியங்குளம் அதனை அண்மித்த பகுதிகளில் கடந்த சில நாட்களாக மோப்ப நாயின் உதவியுடன் சோதனைகள் இடம்பெற்று வருகின்றன. நேற்றைய தினம் புளியங்குளம் புதூர் பகுதியில் இராணுவ சோதனை சாவடியில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் போது மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தினை வழி மறித்து சோதனையிட்ட சமயத்தில் 5 கிலோகிராம் கேரளா கஞ்சாவினை பயணப் பொதியில் வைத்திருந்த மூவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கடந்த மூன்று நாட்களாக மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது 33 கிலோகிராம் கஞ்சாவுடன் பதினொரு பேர் கைது செய்யப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கைது செய்யப்பட்டுள்ளவர்கள் மேலதிக விசாரணைகளின் பின்னர் வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் இன்று முன்னிலைப்படுத்தவுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.