Tamil News
Home செய்திகள் வலிகாமத்தில் 3,300 ஏக்கர் காணி இன்னும் இராணுவக் கட்டுப்பாட்டில் – ஒக்லாண்ட் ஆய்வு அறிக்கை

வலிகாமத்தில் 3,300 ஏக்கர் காணி இன்னும் இராணுவக் கட்டுப்பாட்டில் – ஒக்லாண்ட் ஆய்வு அறிக்கை

“யுத்தம் முடியுவடைந்து 12 வருடங்கள் ஆகியுள்ளபோதிலும், வலிகாமம் வடக்கில் இன்னமும் 3,300 ஏக்கர் தனியார் காணிகளை இராணுவம் தன்வசம் வைத்துள்ளது” என அமெரிக்காவின் ஓக்லாண்ட் நிறுவனம் நேற்று திங்கட்கிழமை வெளியிட்டுள்ள ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மயிலிட்டியில் பல நூறு வருடங்களை பழைமையான வரசித்தி விநாயகர் ஆலயம் மற்றும் சென் மேரி தேவாலயம் ஆகியவை முற்றாக தரைமட்டம் ஆக்கப்பட்டு இராணுவ மாளிகை ஒன்று அவற்றின் மீது கட்டப்பட்டுள்ளது. இந்த ஆலயமும் தேவாலயமும் அங்கே இருந்தனவா என்ற அடையாளமே தெரியாத அளவுக்கு அவை தரைமட்டம் ஆக்கப்பட்டுள்ளதாக இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் சுமார் 400 பேருக்கு சொந்தமான 60 ஏக்கர் காணியும் இந்த பங்களாவுக்காக இராணுவத்தினரினால் அபகரிக்கப்பட்டுள்ளதாக இந்த அறிக்கை குறிப்பிடுகின்றது.

இதேவேளை, வலிகாமத்தில் சில இடங்களை மீள குடியமர்வுக்காக இராணுவம் கடந்த ஆண்டுகளில் அனுமதித்துள்ளபோதிலும், அந்த பகுதிகள் தீவிர இராணுவமயமாக்கலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் இது அப்பகுதி மக்களின் சகஜ வாழ்க்கையினை மோசமாக பாதித்துள்ளதாகவும் இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

காங்கேசன்துறை எல்லையுடனான தையிட்டி கிராமத்தில் கெமுனு விகாரை என்ற புதிய விகாரை ஒன்று அமைக்கபப்ட்டுள்ளது. அங்குள்ள இந்து கோவில் ஒன்றுக்கு சொந்தமான காணி ஒன்றிலேயே இந்த விகாரை அமைக்கப்பட்டுள்ளது. இந்த கெமுனு விகாரையில் இருந்து 1 கிலோ மீற்றர் தூரத்தில் 7 ஆவது பட்டாலியன் இராணுவ முகாம் அமைந்துள்ளது. இந்த 7 ஆவது பட்டாலியன் முகாமுக்கு பக்கத்தில் பிரபல்யமான ஊறணி அந்தோனியார் ஆலயமும் ஊறணி கனிஷ்ட வித்தியாலயமும் இருக்கின்றன. 7 ஆவது பட்டாலியன் முகாமில் இருந்து 1 கிலோ மீற்றர்கள் தொலைவில் இராணுவ பொலிஸாரின் முகாம் 15 ஏக்கர் தனியார் காணியில் அமைந்துள்ளது.

இராணுவ பொலிஸ் முகாமில் இருந்து ஏறத்தாழ 500 மீற்றர்கள் தொலைவில் மிகவும் விசாலமான 10 ஆவது கள பொறியியலாளார்கள் தலைமையகம் இருக்கிறது. இதன் அளவு 2000 ஏக்கர்களுக்கும் அதிகமானது. இது மயியிலிட்டியில் மட்டும் 8 கிராம சேவையாளர் பிரிவுகளை ஆக்கிரமித்துள்ளது. சுமார் 200 வருடங்கள் பழைமையான மயிலிட்டி கலைமகள் வித்தியாலயம் இந்த முகாமை ஒட்டியபடி அமைந்துள்ளது. இந்த பாடசாலைக்கு செல்லும் மாணவர்கள் இந்த முகாம் வேலியில் அமைக்கப்பட்டுள்ள வாசல் வழியாகவே செல்லவேண்டும்.

யுத்தம் முடியுவடைந்து 12 வருடங்கள் ஆகியுள்ளபோதிலும், வலிகாமம் வடக்கில் இன்னமும் 3,300 ஏக்கர் தனியார் காணிகளை இராணுவம் தன்வசம் வைத்துள்ளது என்றும் இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Exit mobile version