வடமாகாண போக்குவரத்து சேவையை தனியாரிற்கு விற்கும் வடக்கு ஆளுநர்

வடமாகாண போக்குவரத்தை உலகத் தரமுடையதாக உயர்த்துவதற்காக Qbus என்னும் தனியார் பேருந்து வலையமைப்பு சேவையை உருவாக்குவதாக வடக்கு ஆளுநர் சுரேன் ராகவன் அவர்கள் கூறியுள்ளார்.
வரையறுக்கப்பட்ட யாழ். தூர பேருந்து உரிமையாளர்களின் நிறுவன உதவியுடன் ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்ற இந்த அறிமுக விழாவில் பேருந்து உரிமையாளர்களுக்கு பற்றுச்சீட்டு இயந்திரத்தை கையளித்து வைத்துள்ளார். இந்நிகழ்வில் உரையாற்றிய ஆளுநர் குறிப்பிடுகையில்,

இந்த சேவை முதலில் யாழ். தூரசேவை உரிமையாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ள இதேவேளை, வடமாகாணத்தின் ஏனைய மாவட்டங்களிலுள்ள பேருந்து உரிமையாளர்களுக்கும் வழங்கப்படவுள்ளது.

பேருந்தில் GPS கருவி பொருத்தப்படுவதால், பேருந்தின் அனைத்து நடவடிக்கைகளை சங்கமும் உரிமையாளர்களும் அவதானிக்க முடியும். அத்துடன் பேருந்து எந்த இடத்தில் நிற்கின்றது என்பதை அறிந்து அங்கு சென்று பயணத்தை தொடரவும் வாய்ப்பு உள்ளது.

முதற்கட்டமாக யாழ். மாவட்டத்திலிருந்து வெளி மாவட்டங்களுக்கு செல்லும் 42 தனியார் பேருந்துகளில் இவை நடைமுறைப்படுத்தப்படவுள்ளன. ஒரு வருட காலத்திற்குள் இது வடமாகாணம் முழுவதும் நடைமுறைப்படுத்தப்படுவதுடன், உள்ளுர் சிற்றூர்திகளிலும் இந்த நடைமுறையை பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

65 வயதைக் கடந்த முதியவர்களுக்கு பயணத்திற்கான விசேட கட்டணக் கழிவு வழங்கப்பட வேண்டும் என்றும், மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் உரிய வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்றும் தெரிவித்தார். இதன் மூலம் அனைத்து போக்குவரத்துக்களும் நேர்த்தியாக நடைபெறும் வாய்ப்புள்ளது என்றும் இங்கு சுட்டிக்காட்டினார்.

இந்த பயணசேவையில் பருவகால அட்டை மற்றும் இலத்திரனியல் பற்றுச்சீட்டு என்பன அறிமுகம் செய்யப்பட்டதுடன், செயற்திறன் மிக்க ஒருங்கிணைக்கப்பட்ட நேர முகாமைத்துவம், கைத்தொலைபேசி ஊடாக அனைத்து செயற்பாடுகளையும் கண்காணித்தல், செயற்படுத்தல் ஆகியன உள்ளடங்கலான பயணிகளின் பாதுகாப்பான பயணசேவை போன்றன பற்றிய விளக்கங்கள் அளிக்கப்பட்டன.

இந்நிகழ்வில் வடமாகாண ஆளுநரின் செயலாளர், வடமாகாண பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர், தனியார் பேருந்து சங்க தலைவர் மற்றும் வடமாகாண தனியார் போக்குவரத்து உரிமையாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.