வடபகுதி மாணவர்களின் Zoom, Viber வகுப்புக்களில் ஊடுருவல்: தவறான தகவல்களை அனுப்புவது யார்?

அதிபர்களின் கைபேசி இலக்கங்களை “ஹக்” செய்து தரவுகளை திருடி மாணவர்கள், ஆசிரியர்களுடன் ஏனையவர்களுக்கும் தவறான பொருத்தமற்ற தகவல்கள், படங்களை அனுப்பி அதிபர்கள், ஆசிரியர்களின் புனிதத் தன்மைக்கு களங்கம் ஏற்படுத்தப்படுவதாக வட மாகாண அதிபர்கள் சங்கம் குற்றம்சாட்டியுள்ளது.

யாழ். ஊடக அமையத்தில் நேற்று இடம் பெற்ற ஊடக சந்திப்பில், வட மாகாண அதிபர்கள் சங்கத்தின் தலைவர் வே.த. ஜெயந் தன் இவ்வாறு தெரிவித்தார். மேலும், கொரோனா அச்சுறுத்தலால் மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளை “சூம்” மற்றும் ‘வைபர்’ செயலிகள் ஊடாக முன்னெடுத்திருந்தோம்.

தற்போது இந்த செயலிகளின் குழுக்கள் ஊடாக எங்களின் அதிபர்கள் சங்க உறுப்பினர்களினதும், உறுப்பினர்கள் அல்லாத வேறு நபர்களினதும் கைபேசி இலக்கங்களை “ஹக்” செய்து, அந்தக் ழுவுக்குள் இருக்கும் மாணவர்கள், ஆசிரியர்கள் உட்பட ஏனையவர்களுக்கு தவறான தகவல், பொருத்தமற்ற படங்களை அனுப்பியுள்ளார்கள். இதன் மூலம் அதிபர்கள், ஆசிரியர்களின் புனிதத் தன்மைக்கு களங்கத்தை ஏற்படுத்தியுள்ளனர்.

இதனால், எங்களின் அதிபர்கள், ஆசிரியர்கள் மிகுந்த மன உளைச்சலுக்கும், விரத்திக்கும் ஆளாகியிருக்கின்றார்கள். இனிவரும் காலங்களிலும் இப்படியான நிகழ்வு கல்வி புலத்திலே நடைபெறுமாக இருந்தால் மாணவர் சமுதாயத்தின் மீது அது பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்று தெரிவித்தார். அத்துடன், ஹக் செய்யப்பட்ட கைபேசி இலக்கங்களையும் அவர் வெளியிட்டிருந்தார்.