Tamil News
Home செய்திகள் வடக்கு கிழக்கு போராட்டங்களுக்கு மட்டும் தடை எதற்காக? சபாநாயகரிடம் மனோ கேள்வி

வடக்கு கிழக்கு போராட்டங்களுக்கு மட்டும் தடை எதற்காக? சபாநாயகரிடம் மனோ கேள்வி

 

நாட்டின் பல இடங்களில் நடைபெறும் போராட்டங்களுக்கு பெறப்படாத தடையுத்தரவுகள், பொத்துவில்-பொலிகண்டி பேரணியில் கலந்துக்கொண்ட எம்பீக்களுக்கு எதிராக மாத்திரம் குறிவைத்து பெறப்பட்டு, நேற்று என்னிடம் இது தொடர்பில் பொலிஸ்துறை வாக்குமூலம் பெற்றது ஏன் என்பது பற்றி பொலிஸ் மாஅதிபரிடம் வினவி எங்களுக்கு அறிவியுங்கள் என நான் இன்று நடைபெற்ற கட்சி தலைவர்கள் கூட்டத்தில் சபாநாயகர் மகிந்த யாபாவிடம் கேள்வி எழுப்பினேன்.

எனது செயலாளரை தொடர்பு கொண்ட சபாநாயகர் அலுவலகம், பொலிஸ் மாஅதிபருக்கு இதுபற்றிய கடிதம் நாளை அனுப்பப்படும் என தெரிவித்துள்ளது என கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவருமான மனோ கணேசன் எம்பி தெரிவித்துள்ளார்.

மனோ எம்பி இதுபற்றி மேலும் கூறியுள்ளதாவது,

எதிரணி எம்பீக்களுக்கு எதிராக மாத்திரம் பொலிசார் திட்டமிட்டு, நீதிமன்ற தடையுத்தரவுகளை பெறுகிறார்கள். எம்பிகளாக தெரிவு செய்யப்பட்டு பாராளுமன்றம் வருவது, அங்கு சபையில் உரையாற்ற மட்டுமல்ல. உண்மையில் அது 25 விகிதம்தான். எமது 75 விகித பணி, என்னை பொறுத்தவரையில், தெருவில், மக்கள் மத்தியில்தான் இருக்கிறது. ஆகவே பாராளுமன்றத்துக்கு உள்ளேயும், வெளியேயும் எம்பிக்களின் கடமையை செய்யும் சுதந்திரத்தை, சபாநாயகர் என்ற முறையில் நீங்கள் உறுதிப்படுத்த வேண்டும்.

கொழும்பில் தினசரி ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும் போது, பெறப்படாத தடையுத்தரவுகள், ஏன் வட கிழக்கில் எமது மக்கள் போராட்டங்கள் நடைபெறும் மட்டும் பெறப்பட்டு எம்பீக்களின் உரிமையை மறுக்கும் வண்ணம் பொலிஸ் செயல்படுகிறது என்பதை பொலிஸ் மாஅதிபரிடம் கேட்டு சொல்லுங்கள் என சபாநாயகரிடம் இன்று கட்சி தலைவர்கள் கூட்டத்தில் போது கேள்வி எழுப்பினேன்.

இதுபற்றி நான் பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்புவேன். இந்த கட்சி தலைவர் குழுவில் அங்கம் வகிப்பதால், அதற்கு முன் இன்று இங்கும் அதுபற்றி கேட்கிறேன், என சபாநாயகரிடம் நான் கூறினேன். சற்றுமுன் எனது செயலாளரை தொடர்பு கொண்ட சபாநாயகர் அலுவலகம், பொலிஸ் மாஅதிபருக்கு இதுபற்றிய கடிதம் நாளை அனுப்பப்படும் என தெரிவித்துள்ளது

எம்பீக்களின் உரிமை தொடர்பில் நான் எழுப்பிய இந்த பிரச்சினைக்கு, கட்சி தலைவர் கூட்டத்தில் இன்று கலந்துக்கொண்ட அனைத்து கட்சி எம்பீக்களும், ஆளும் மற்றும் எதிர்கட்சி உறுப்பினர்கள் என்ற கட்சி பேதமின்றி ஆதரவு வழங்கினார்கள். தடையுத்தரவு பெறுவது, நீதிமன்றத்துக்கு இழுப்பது, சிறைக்கு அனுப்புவது என்ற சலசலப்புகளுக்கு அஞ்சி ஓடி ஒளியும் அரசியல்வாதி நானில்லை இன்று இவர்களுக்கு விளக்க வேண்டிய தேவை எனக்கு இருக்கின்றதால், இந்த பிரச்சினையை இன்று நடைபெற்ற கட்சி தலைவர்கள் கூட்டத்தில் நான் எழுப்பினேன்.

Exit mobile version