Tamil News
Home செய்திகள் வடக்கு, கிழக்கில் வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல்

வடக்கு, கிழக்கில் வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல்

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்காக வடக்கு கிழக்கு மாவட்டங்களைச் சேர்ந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உட்பட சில தமிழ்க் கட்சிகள் வேட்புமனுக்களை இன்று (19) தாக்கல் செய்துள்ளன.

யாழ். செயலகத்தில் இன்று காலை 8.00 மணிமுதல் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு வருகின்றன. இதற்கமைய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பாக முதன்மை வேட்பாளரான இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவுடன், எம்.ஏ.சுமந்தரன், தர்மலிங்கம் சித்தார்த்தன், சிவஞானம் சிறிதரன், இமானுவேல் ஆர்னோல்ட், சசிகலா ரவிராஜ் ஆகியோர் வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.

மேலும் ஐக்கிய தேசியக் கட்சியின் முதன்மை வேட்பாளர் விஜயகலா மகேஸ்வரன் தலைமையிலான வேட்பாளர்களும் வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளனர். அத்துடன் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி சார்பாக, முதன்மை வேட்பாளர் சி.வி.விக்னேஸ்வரன் தலைமையில், எம்.கே.சிவாஜிலிங்கம், சுரேஸ் பிரேமச்சந்திரன் ஆகியோரும் வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி சார்பாக முதன்மை வேட்பாளரான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையில் செல்வராசா கஜேந்திரன், வாசுகி ஆகியோரும் வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர்.

சிறீலங்கா சுதந்திரக் கட்சி சார்பில் அங்கஜன் இராமநாதன் தலைமையில் சங்கரப்பிள்ளை பத்மராஜா, கந்தையா தியாகலிங்கம், பரணிரூபசிங்கம் வரதராஜசிங்கம் உள்ளிட்டோரும் வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர். அத்துடன் சுயேட்சைக் குழுக்களும் தமது வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர்.

அத்துடன் வன்னித் தேர்தல் தொகுதியிலும் வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. செல்வம் அடைக்கலநாதன், ப.சத்தியலிங்கம், வினோநோகராதலிங்கம், செ.மயூரன், சாள்ஸ் நிர்மலநாதன் மற்றும் ஜி.ரி.லிங்கநாதன் ஆகியோர் வவுனியா மாவட்ட செயலகத்தில் வேட்புமனுக்களை தாக்கல் செய்திருந்தனர்.

மேலும் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி முதன்மை வேட்பாளரான முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தலைமயிலான வேட்பாளர்கள் வவுனியா மாவட்ட செயலகத்தில் வேட்புமனுக்களை தாக்கல் செய்திருந்தது.

மட்டக்களப்பு மாவட்டத்திலும் வேட்புமனுக்கள் இன்று தாக்கல் செய்யப்பட்டது. இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் கி.துரைராஜசிங்கம் தலைமையில் வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டது.

இலங்கை தமிழரசுக் கட்சியின் சார்பில் ஐந்து பேரும், தமிழீழ விடுதலை இயக்கத்தின் சார்பில் மூன்று பேரும், புளொட் சார்பில் ஒருவரும் வேட்புமனுக்களை தாக்கல் செய்திருந்தனர். இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் கி.துரைராஜசிங்கத்தினை தலைமை வேட்பாளர்களாகக் கொண்டு எட்டு உறுப்பினர்கள் மட்டக்களப்பில் பேட்டியிடுகின்றனர்.

Exit mobile version