வடக்கில் 55 பேருக்கு நேற்று கொரோனா – 20 பேர் ஆடைத் தொழிற்சாலை ஊழியர்கள்

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 9 பேர் உட்பட வடக்கு மாகாணத்தில் மேலும் 55 பேருக்குகே கொரோனா தொற்றுள்ளமை நேற்று கண்டறியப்பட்டுள்ளது என மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் 642 பேரின் மாதிரிகள் நேற்று பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. அதில் , யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 9 பேரும், முல்லைத்தீவு மாவட்டத்தில் 20 பேரும், கிளிநொச்சி மாவட்டத்தில் 8 பேரும், வவுனியா மாவட்டத்தில் 11 பேரும், மன்னார் மாவட்டத்தில் 7 பேரும் என 55 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

முல்லைத்தீவு வைத்தியசாலையில் 8 பேரும், புதுக்குடியிருப்பு சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் 12 பேரும் என 20 பேருக்குத் தொற்றுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. அவர்கள் அனைவரும் புதுக்குடியிருப்பு ஆடைத்தொழிற்சாலையைச் சேர்ந்தவர்கள்.

கிளிநொச்சி வைத்தியசாலையில் 5 பேருக்கும் , பளை சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் 3 பேருக்கும் , வவுனியா சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த ஒருவருக்கும், வவுனியா சுகாதார மருத்துவ அதிகாரிபிரிவில் இருவருக்கும், பூவரசங்குளம் வைத்தியசாலையில் 6 பேருக்கும், மன்னார் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட 7 பேருக்கும் தொற்றுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

அத்துடன், யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வவுனியா வளாக மாணவர்கள் 6 பேருக்குத் தொற்றுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் சேர்க்கப்பட்ட 3 பேருக்கும், பருத்தித்துறை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட இருவருக்கும், சாவகச்சேரி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட ஒருவருக்கும், ஊர்காவற்றுறை, சாவகச்சேரி மற்றும் சங்கானை பிரதேச சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுகளில் தலா ஒருவருக்கும் தொற்றுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது” என்றார்.