Tamil News
Home செய்திகள் வடக்கில் சந்தைகள், திருமண மண்டபங்கள் நாளை திறக்கப்படும் – சுகாதாரப் பிரிவு அனுமதி

வடக்கில் சந்தைகள், திருமண மண்டபங்கள் நாளை திறக்கப்படும் – சுகாதாரப் பிரிவு அனுமதி

வடக்கு மாகாணத்திலுள்ள திருமண மண்டபங்கள் மற்றும் பொதுச்சந்தைகள் ஆகியவற்றை நாளை திங்கட்கிழமையில் இருந்து திறப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்த விடயத்தை வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். கடந்த மாதம் வடக்கு மாகாணத்தில் ஏற்பட்ட கொரோனா வைரஸ் பரம்பல் காரணமாக பொதுச்சந்தைகள் மற்றும் திருமண மண்டபங்கள் அனைத்தும் சுகாதார பிரிவினரால் மூடப்பட்டிருந்த நிலையில், கடந்த வெள்ளிக் கிழமை வடக்கு மாகாண சுகாதார சேவைகள் திணைக்களத்தில் இடம்பெற்ற கொரோனா தடுப்பு வழிகாட்டல் கூட்டத்தில் மேற்படி தீர்மானம் எடுக்கப்பட்டதாக அவர் கூறினார்.

வவுனியா மாவட்டம் தவிர்ந்த ஏனைய நான்கு மாவட்டங்களிலும் உள்ள திருமண மண்டபங்களில் 150 பேருடன் சுகாதார வழிகாட்டல்களைப் பின்பற்றி திருமண மண்டபங்களை திறப்பதற்கு அனுமதி அளிப்பதாக ஆ.கேதீஸ்வரன் சுட்டிக்காட்டினார்.

அத்துடன் பொதுச்சந்தைகளையும் சுகாதார வழிகாட்டல்களைப் பின்பற்றித் திறப்பதற்கு அனுமதி அளிப்பதாகவும் இந்த விடயம் தொடர்பான அறிவுறுத்தல்கள், மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் மற்றும் மாகாண பிரதம செயலாளர், அரச அதிபர் ஆகியோருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

Exit mobile version