Tamil News
Home செய்திகள் ராஜீவ் காந்தி கொலை வழக்கு : சிபிஐ விசாரணை அறிக்கை மீது உச்ச நீதிமன்றம்...

ராஜீவ் காந்தி கொலை வழக்கு : சிபிஐ விசாரணை அறிக்கை மீது உச்ச நீதிமன்றம் அதிருப்தி

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்ட வழக்கில், அது தொடர்பான சிபிஐ விசாரணை குறித்த நிலை அறிக்கை மீது தற்போது உச்ச நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.

உண்மையை வெளிக்கொண்டு வருவதில் ஏற்பட்ட முன்னேற்றங்களை வெளிப்படுத்தாமல் சிபிஐ விசாரணை அறிக்கை தனது முந்தைய அறிக்கைகளையே அப்படியே கிளிப்பிள்ளை போல் மீண்டும் தெரிவித்து வருகின்றது.

“நாங்கள் இந்த அறிக்கையில் திருப்தியடையவில்லை“ என்று நீதிபதிகள் எல்.நாகேஸ்வர ராவ் மற்றும் ஹேமந்த் குப்தா ஆகியோர் அடங்கிய குழுவினர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளனர்.

மேலும் மூத்த சட்ட அதிகாரி, ஒரு கூடுதல் சொலிஸ்டர் ஜெனரல் நீதிமன்றத்தில் ஆஜராகும் வரை, இந்த வழக்கை பிற்பாடு எடுத்துக் கொள்ளலாம் என்றும் அதுவரை இந்த வழக்கு நிலுவையில் இருக்கட்டும் என்று தெரிவித்தனர்.

அரைமணி நேரம் சென்ற பின்னர் மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்தது. இம்முறை நீதிபதி நாகேஸ்வர ராவ் அதிக வார்த்தைகளை பேசாது தன் அதிருப்தியை சுருக்கமாகத் தெரிவித்தார்.

அவர் பேசும் போது, “இந்த அறிக்கைக்கும் முன்னால் தாக்கல் செய்த அறிக்கைக்கும் எந்த ஒரு வித்தியாசமும் இல்லை. அனைத்தும் முன்பு கூறப்பட்டதே மீண்டும் கூறப்பட்டுள்ளது. ஏற்கனவே சொன்னது தான் மீண்டும் சொல்லப்பட்டுள்ளது. நாங்கள் என்ன கேட்கின்றோம் என்றால் இந்த விசாரணையில் என்ன முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்பதை தான். அதாவது கடந்த 2 ஆண்டுகளில் குறைந்தபட்சம் என்ன முன்னேற்றம்?” என்று நீதிபதி நாகேஸ்வர ராவ் கேள்வி எழுப்பினார்.

பேரறிவாளன் சார்பாக முன்னிலையான மூத்த வழக்கறிஞர் கோபால் சங்கர நாராயணன், ராஜீவ் கொலை பின்னணியில் பெரிய சதி இருப்பதாக விசாரித்து வரும் சிபிஐ பல்துறை ஒழுங்கு கண்காணிப்பு ஏஜென்சி குண்டு தயாரிப்பு பற்றி தொடக்கம் குறித்து இன்னும் தன் விசாரணையை முடிக்கவில்லை என்று தெரிவித்தார்.

இதனையடுத்து சிபிஐ அறிக்கையை நீதிமன்ற அறையில் பரிசீலிக்குமாறு பேரறிவாளனின் வழக்கறிஞர்களை நீதிமன்ற அமர்வு அனுமதித்தது. அறிக்கை சீல் வைக்கப்பட்ட உறையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

பேரறிவாளன் ராஜீவ் கொலை வழக்கில் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டு சுமார் கால் நூற்றாண்டு காலம் சிறையில் தண்டனை அனுபவித்து வருகின்றார். அதாவது இவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. கைது செய்யப்பட்ட போது பேரறிவாளன் வயது 19. சிபிஐ பல்துறை ஒழுங்கு கண்காணிப்பு குழு பெரிய சதி குறித்த விசாரணையை முடிக்கும் வரை தன் ஆயுள் தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டும் என்று பேரறிவாளன் மனு ஒன்றில் கோரியிருந்தார்.

மேலும் சந்தேக நபர்கள் 21பேரில் ஒருவரான நிக்சன் என்ற சுரன் என்பவரை சிபிஐ இனர் இன்னமும் விசாரிக்கவில்லை. இவருக்குத் தான் குண்டு தயாரிக்கப்பட்ட விபரம் தெரியும் என்று கூறப்படுகின்றது.

இந்த விவகாரத்தில் எதற்குப் பயன்படுத்தப் போகிறார்கள் என்று தனக்குத் தெரியாமலேயே இரண்டு 9 வோல்ட் பற்றரிகளை வழங்கியது தான் தன் பங்கு என்று பேரறிவாளன் தனது மனுவில் கூறியுள்ளார். இது குறித்து தடா பொலிஸ் அதிகாரியிடம் தன் வாக்குமூலம் செல்லுபடியாகக் கூடிய ஆதாரமல்ல என்றும் பேரறிவாளன் கூறியுள்ளார்.

மேலும் சிபிஐயின் சிறப்பு விசாரணைக் குழுவின் தலைவர் டி.ஆர்.கார்த்திகேயன் ஐ.இ.டி இலங்கையில் தயாரிக்கப்பட்டது என்று தன் அறிக்கையில் தெரிவித்துள்ளார். 9 வோல்ட் பற்றரி ஐ.இ.டியில் இணைத்தே செய்யப்பட்டதாக ஆதாரம் உள்ளது.

இப்படியிருக்க பேரறிவாளன் 9 வோல்ட் பற்றரி பயன்படுத்தப்பட்டதாக கூறமுடியாது“ என்று பேரறிவாளன் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இது தொடர்பாக ராஜீவ் கொலை சூத்திரதாரி சிவராசன் இலங்கையில் உள்ள பொட்டு அம்மான் என்பவருக்கு அளித்த தொலைத் தொடர்பு செய்தியில் தான், சுபா, தனு ஆகியோருக்குத் தான் ராஜீவ் கொலை பின்னணியில் உள்ள சதி தெரியும் என்று கூறியுள்ளதையும் பேரறிவாளன் தன் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் உச்ச நீதிமன்ற அமர்வு சிபிஐ இன் விசாரணை அறிக்கை குறித்து அதிருப்தி தெரிவித்து, அதில் புதிதாக ஒன்றுமில்லை என்று கூறி ராஜீவ் காந்தி கொலையில் பயன்படுத்தப்பட்ட பெல்ட் குண்டு தொடர்பாக புதிய விசாரணை அறிக்கையை தாக்கல் செய்யக்கோரி சிபிஐக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதுவரை காலமும் வழக்கை விசாரித்து வரும் இந்திய நீதிமன்றங்களுக்கு சிபிஐ ஒரே அறிக்கையை சமர்ப்பிப்பது தெரியாது இருக்க முடியாது. அப்படி ஒரே அறிக்கை சமர்ப்பிக்கப்படுவது தெரிந்தால், குண்டு தயாரித்தவரை விசாரணைக்குட்படுத்தவில்லை என்பதும் தெரிந்தால் தற்போது ஆயுள் தண்டனை பெற்று வரும் 7 பேரையும் விடுவிப்பதில் எந்த தடங்கலும் இல்லை என்பது தான் அர்த்தம். அப்படியிருந்தும் அந்த 7பேரின் விடுதலையை தாமதமாக்குவது எதற்காக என்று புரியவில்லை.

ஒருவேளை இந்த 7பேரையும் விடுதலை செய்து விட்டால் ராஜீவ் கொலைக்கு திட்டமிட்டவர்கள் மற்றும் சதி வலையில் உள்ளவர்கள் மாட்டிக் கொள்ளக்கூடும் என்பதால் இவர்களின் விடுதலை தாமதமாகின்றது என்றே கருதவேண்டியுள்ளது.

Exit mobile version