ராஜித சேனாரட்ன மறைத்து வைக்கப்பட்டமை தொடர்பில் சந்திரிக்கா வெளியிட்டுள்ள தகவல்!

பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவை, தனது வீட்டில் மறைத்து வைத்திருந்ததாக வெளியான செய்தி உண்மையில்லை என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

கடந்த சில தினங்களுக்கு சிங்கள தொலைக்காட்சி ஒன்று இந்தத் தகவலை வெளியிட்டிருந்தது. இந்நிலையில் குறித்த ஊடகத்திற்கு சந்திரிக்கா மறுப்பு அறிக்கை ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.

அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது.

“கடந்த மாதம் 27 மற்றும் 28ஆம் திகதிகளில் சிங்கள ஊடகம் மற்றும் வானொலி, முன்னாள் அமைச்சர் ராஜிதவை தனது வீட்டில் மறைந்திருந்ததாக செய்தி வெளியிட்டிருந்தன.

எனினும் இந்த செய்தி முற்றிலும் போலியானது. அடிப்படையற்ற பாரிய குற்றச்சாட்டாகும். இந்த குற்றச்சாட்டை நான் முழுமையாக நிராகரிக்கின்றேன். அந்த செய்தியை மாற்றி உண்மைகளை வெளியிட விரைவாக நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

தனது அரசாங்கத்தின் போது பெற்றுக் கொண்ட அனுமதி மற்றும் வசதியில் ஆரம்பிக்கப்பட்ட குறித்த தொலைகாட்சி தான் பதவி விலகி ஒரு மாதத்தில் தன்னை குறித்து தவறான செய்திகளை வெளியிட்டது. தான் அதனை நிராகரித்து வெளியிட்ட அறிக்கையை உட்பட பிரசுரிக்க குறித்த தொலைகாட்சி மறுத்தது.

அனைத்து தரப்பும் ஏற்றுக்கொண்ட ஊடக தர்மத்திற்கு எதிராக அப்போது செயற்பட்டாலும் தற்போது அதனை சரியான பதிவிட நடவடிக்கை மேற்கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்” என சந்திரிக்கா தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.