ராஜபக்‌ஷ குடும்ப ஆட்சி விரைவில் முடிவுக்கு வரும் – முருத்தெட்டுவே ஆனந்த தேரர்

“ராஜபக்‌ஷ அரசின் மீதான மக்களின் எதிர்ப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. இந்த நிலைமையில் ராஜபக்‌ஷ குடும்ப ஆட்சி முடிவுக்கு வரும் காலம் வெகுதொலைவில் இல்லை” என கொழும்பு அபயாராம விகாரையின் விகாராதிபதி முருத்தெட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்தார்.

எரிபொருள் விலை அதிகரிப்பு தொடர்பாக நேற்று ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“ராஜபக்‌ஷ அரசின் செயற்பாடுகள் நாளுக்கு நாள் மக்களைச் சீற்றத்துக்கே தள்ளிக்கொண்டு போகின்றது. காலஞ்சென்ற மாதுலுபாவே சோபித தேரர், நாட்டின் அதிகாரங்கள் தனிநபர் ஒருவரின் கரங்களில் குவிக்கப்படக் கூடாது என்று குறிப்பிட்டிருந்தார்.

அவ்வாறாக அதிகாரங்களைத் தனிமனிதனிடம் வழங்கும்போது என்ன நடக்கும் என்ற நிலைமையை தற்போது புரிந்துகொள்ளக் கூடியதாக இருக்கின்றது. இந்நிலையில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ நிறைவேற்று அதிகாரத்தை எரிபொருள் அதிகரிப்பைத் தடுப்பதற்குப் பயன்படுத்தியிருக்கலாம். அவ்வாறு செய்திருந்தாலே அவர் நிறைவேற்று ஜனாதிபதியாவார்” என்றார்.