ராகுல் காந்திக்கு கொரோனா தொற்று உறுதி

காங்கிரஸ்  பாராளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி  தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் 2-வது அலை மக்களை அச்சுறுத்தி வருகிறது.  நாள்தோறும் 2 இலட்சத்துக்கும் அதிகமானவர்கள் கொரோனாவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர், ஆயிரக்கணக்கில் உயிரிழந்தும் வருகின்றனர். எரிப்பதற்கு இடம் இன்றி இறந்த உடல்களை வைத்துக்கொண்டு மக்கள் காத்து நிக்கின்றனர்.

அத்தோடு பல்வேறு மாநிலங்களில் தடுப்பூசி பற்றாக்குறை நிலவுகிறது, ஓக்ஸிஜன் பற்றாக்குறை நிலவுகிறது என்று குற்றம்சாட்டப்படுகிறது.

அதே நேரம் மத்திய அமைச்சர்கள் அரசியல் தலைவர்கள், முதல்வர்கள் என பலரும்  கொரோனா தொற்றுக்கு ஆளாகி வருகின்றனர்.

இந்தநிலையில் காங்கிரஸ்  பாராளுமன்ற உறுப்பினரான ராகுல் காந்தியும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில்,

‘‘லேசான அறிகுறியை உணர்ந்ததால் கோவிட் பரிசோதனை செய்து கொண்டேன். அதில் கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.

அண்மையில் என்னுடன் தொடர்பில் இருந்த அனைவரும் கொரோனா கட்டுப்பாட்டு நிபந்தனைகளை பின்பற்ற வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். பாதுகாப்புடன் இருங்கள்’’ எனப் பதிவிட்டுள்ளார்.

நேற்று முன்னாள் பிரதமரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான மன்மோகன் சிங்கிற்கு கொரோனா தொற்றுக்கு இலக்காகி,  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.