யூத ஆக்கிரமிப்பு தொடர்பான அமெரிக்காவின் கருத்துக்கு ஐநா கவலை

மேற்குக் கரையில் அமைக்கப்பட்டுள்ள யூதக் குடியிருப்புகள் சட்ட விரோதமானவை அல்ல என்று அமெரிக்கா அறிவித்துள்ளது வருத்தமளிப்பதாக ஐ.நா பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவரது செய்தித் தொடர்பாளர் ஸ்டெபானி துஜாரிக் கூறியதாவது:

மேற்குக் கரைப் பகுதியில் இஸ்ரேல் அமைத்துள்ள யூதக் குடியிருப்புகள் சர்வதேச சட்டங்களுக்கு எதிரானவை அல்ல என்று அமெரிக்கா கூறியுள்ளது.

எனினும், அந்தக் குடியிருப்புகள் சர்வதேச சட்டங்களுக்கும், ஜெனீவா ஒப்பந்தத்துக்கும் எதிரானவை என்ற ஐ.நாவின் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை.

அமெரிக்காவின் அந்த முடிவும், அறிவிப்பும் எங்களை வருத்தமடையச் செய்துள்ளது.

ஐ.நாவைப் பொறுத்தவரை, பாலஸ்தீன விவகாரத்தில் பாதுகாப்புச் சபை மேற்கொண்ட அனைத்து தீர்மானங்களையும் உறுதியாகப் பின்பற்றும்.

பலஸ்தீனர்களுக்கும், இஸ்ரேலியர்களுக்கும் இடையே அந்த தீர்மானங்களின் அடிப்படையில் நிலைத்த அமைதியை ஏற்படுத்துவதில் ஐ.நா உறுதியுடன் இருக்கிறது என்றார் அவர்.

இஸ்ரேலுக்கும், எகிப்து, சிரியா, ஜோர்தான், ஈராக் ஆகிய நாடுகளின் கூட்டணிக்கும் இடையே கடந்த 1967 ஆம் நடந்த ‘6 நாள்’ போரின் முடிவில், மேற்குக் கரை, பாலஸ்தீனம் உள்ளிட்டவற்றில் சில பகுதிகளை இஸ்ரேல் கைப்பற்றியது. அந்தப் பகுதிகளில், தங்கள் நாட்டு யூதர்களுக்கான குடியிருப்புகளை இஸ்ரேல் அமைத்துள்ளது.

இந்தக் குடியிருப்புகள் சர்வதேச சட்டங்களுக்கு எதிரானவை என்று உலக நாடுகள் கூறி வருகின்றன. ஐ.நாவும், அவை 4ஆவது ஜெனீவா ஒப்பந்தத்தை மீறுவதாக கண்டித்துள்ளது.

இந்தச் சூழலில், மேற்குக் கரையில் உள்ள யூதக் குடியிருப்புகளை இனியும் சட்டவிரோதமானவையாகக் கருதப் போவதில்லை என்று அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மைக்கல் பொம்பியோ திங்கட்கிழமை அறிவித்தார்.

அந்தக் குடியிருப்புகள் சர்வதேசச் சட்டங்களுக்கு எதிரானவை என்று கூறி வருவதால் எந்தப் பலனும் இல்லை. அந்த நிலைப்பாட்டால் பலஸ்தீன பிரச்சினைக்கு அமைதித் தீர்வு காண்பதில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை என்பதால் அமெரிக்க அரசு இந்த முடிவுக்கு வந்ததாக அவர் விளக்கமளித்தார்.

இந்தச் சூழலில், யூதக் குடியிருப்புகள் சர்வதேச சட்டங்களுக்கு எதிரானவை என்ற தனது நிலைப்பாட்டில் அமெரிக்காவின் அறிவிப்பு எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது என்று தற்போது ஐ.நா  தெரிவித்துள்ளது.