யுத்த காலத்தில் இருந்தே கிழக்கில் இஸ்லாமிய ஜிகாத் குழு இயங்கியது – காவல்துறை அதிகாரி சட்சியம்

இலங்கையில் உள் நாட்டு யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியில் கிழக்கு மாகாணத்தில் ஹிஜாத் குழு எனும் பெயரில் கடும்போக்கு இஸ்லாமிய குழு இயங்கியதாக, கொழும்பு பிரதிப் பொலிஸ் மா அதிபரின் தனிப்பட்ட உதவியாளர் பிரதான பொலிஸ் பரிசோதகர் திலீப் திவாகர டி சில்வா இன்று சாட்சியமளித்தார்.

குறித்த குழுவினர் ஆயுதம் ஏந்தி இராணுவத்தினர் மற்றும் பொலிஸாரை தாக்காத போதும், அவர்களது நிலைப்பாடுகளும் நடவடிக்கைகளும் சாதாரண முஸ்லிம்களிடமிருந்து வேறு பட்டதாக  காணப்பட்டது என அவர் இதன்போது கூறினார்.

21/4 உயிர்த்த ஞாயிறு தினம் இடம்பெற்ற தொடர் தற்கொலை தாக்குதல்கள்களை மையப்படுத்தி அது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க கடந்த செப்டம்பர் 21 ஆம் திகதி நியமிக்கப்பட்ட ஐவர் கொண்ட ஜனாதிபதி  விசாரணை ஆணைக் குழுவின்  சாட்சி விசாரணைகள் இன்று வியாழக்கிழமை 4 ஆவது நாளாக நடைபெற்றது.

இந் நிலையில் 3 ஆவது சாட்சியாளராக  கொழும்பு பிரதிப் பொலிஸ் மா அதிபரின் தனிப்பட்ட உதவியாளர் திலீப் திவாகர டி சில்வா சாட்சியளித்தார்.

இதன்போது  தொடர் தற்கொலை குண்டுத் தாக்குதல் இடம்பெற முன்பு, கடந்த ஏப்ரல் 11 ஆம் திகதி மேல் மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் நந்தன முனசிங்கவால், கொழும்பு பிரதிப் பொலிஸ் மா அதிபர் அலுவலகத்துக்கு அனுப்பட்ட  தேசிய தெளஹீத் ஜமாத் தலைவர் மொஹம்மட் சஹ்ரானினால் தர்கொலை குண்டுத் தாக்குதல் நடத்தப்படலாம் என்ற எச்சரிக்கை தகவல் அடங்கிய உளவுக் கடிதம், உரிய முறையில் தன்னால் கொழும்பு வடக்கு, தெற்கு மற்றும் மத்தி உள்ளிட்ட பிரிவுகளுக்கு வழங்கப்பட்டதாக அவர் ஆவணங்கள் பல்வற்றை மையப்படுத்தி சாட்சி வழங்கினார்.