யாழ் மாவட்ட மக்களுக்கு  கொரோனா தடுப்பூசி ஏற்றும் செயற்திட்டம் இன்று ஆரம்பம்

யாழ் மாவட்ட மக்களுக்கு  கொரோனா தடுப்பூசி ஏற்றும் செயற்திட்டம் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந் நிலையில் யாழ் மாவட்டத்திற்குரிய கொரோனா தடுப்பூசி மருந்து வடக்கு மாகாண ஆளுநரால் வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பதில் பணிப்பாளரிடம் வைபவ ரீதியாக கையளிக்கும் நிகழ்வு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இன்று இடம்பெற்றது.

நாடு பூராகவும் பொதுமக்களுக்கு தடுப்பூசி வழங்கும் திட்டம் இடம்பெற்றுவரும் நிலையில் பிரதமர் மஹிந்த ராஜபக்சவினால் யாழ்ப்பாண மாவட்ட மக்களுக்கு வழங்குவதற்கு 50,000 தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன..

இன்று காலை 8 மணி முதல் யாழ்ப்பாண மாவட்டத்தின் சகல பிரதேச செயலாளர் பிரிவிலும் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்கும் செயற்பாடு முன்னெடுக்கப்படுகிறது

யாழ் மாவட்டத்தில் முதற்கட்டமாக அதிக அளவில் தொற்றாளர்கள் இனங்காணப்பட்ட பிரதேசங்களில் 30 வயதிற்கு மேற்பட்டோர் அனைவருக்கும் தடுப்பூசி வழங்குவதற்கான ஏற்பாடுகள் வடக்கு மாகாண சுகாதார சேவைகள் திணைக்களத்தினால் முன்னெடுக்கப்பட்டுள்ளது

யாழ் மாவட்டத்திற்கு வழங்கப்பட்டுள்ள தடுப்பூசிகளை உத்தியோக பூர்வமாக கையளிக்கும் நிகழ்வில் வடக்கு மாகாண ஆளுநர், பிரதமரின் வடக்கிற்கான இணைப்பாளர், யாழ் மாவட்ட அரச அதிபர், கடற்தொழில் அமைச்சர், பாராளுமன்ற உறுப்பினர்,வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பதில் பணிப்பாளர்,யாழ் போதனா வைத்திய சாலை வைத்தியர்கள், மற்றும் சுகாதாரப் பிரிவினர் கலந்து கொண்டனர்.