யாழ். தையிட்டியில் இராணுவத்தினரால் அமைக்கப்பட்டுள்ள விகாரையை அகற்ற கோரி போராடியவர்கள் கைது

WhatsApp Image 2023 05 23 at 3.18.17 PM யாழ். தையிட்டியில் இராணுவத்தினரால் அமைக்கப்பட்டுள்ள விகாரையை அகற்ற கோரி போராடியவர்கள் கைது

யாழ்ப்பாணம் தையிட்டி பகுதியில் சட்டவிரோதமாக இராணுவத்தினரால் அமைக்கப்பட்டுள்ள விகாரையை, அகற்ற கோரி பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தலைமையில் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தில் கலந்து கொண்ட சட்டத்தரணி ஒருவர், நான்கு பெண்கள் உள்ளிட்ட 09 பேர் பலாலி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். 

தையிட்டி விகாரையை அகற்ற கோரி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தலைமையில் அவரது கட்சி உறுப்பினர்கள் சிலர் இன்று செவ்வாய்க்கிழமை குறித்த விகாரைக்கு சற்று தூரத்தில் போராட்டம் ஒன்றினை முன்னெடுத்தனர்.

அதன் போது அங்கு வந்திருந்த பலாலி காவல் நிலைய பொறுப்பதிகாரி தலைமையிலான காவல்துறையினர், அவ்விடத்தில் சட்டவிரோதமான முறையில் கூட முடியாது. அதனால் இங்கிருந்து அனைவரும் கலைந்து செல்லுமாறு பணித்தனர்.

அதனை மீறி அங்கு நின்றவர்களை சட்டவிரோதமான முறையில் கூடி, பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்க முயன்றனர் எனும் குற்றச்சாட்டில் சட்டத்தரணி ஒருவர், நான்கு பெண்கள் உள்ளிட்ட 09 பேரை கைது செய்தனர்.

அதேவேளை பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தனியார் காணி ஒன்றில் நின்றிருந்த வேளை அவரை வலுக்கட்டாயமாக தூக்கி அக்காணியில் இருந்து காவல்துறையினர் அப்புறப்படுத்தி இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.