யாழ் குடாநாடு தனித்தீவாகும் அபாயம்-ஐங்கரநேசன்

புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த உடனேயே மணல் ஏற்றிச்செல்லும் வாகனங்களுக்கு அவசியமாக இருந்த வழித்தட அனுமதியை நீக்கியிருப்பதால் வடக்கில் மணற்கொள்ளை விஸ்வரூபம் பெற்றுள்ளது.

இதனால், சுற்றுச்சுழலில் பாரிய சீர்குலைவு ஏற்பட இருப்பதோடு யாழ் குடாநாடு தனித்தீவாகும் அபாயமும் அதிகரித்துள்ளது என தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவரும் வடக்கு மாகாணத்தின் முன்னாள் விவசாய அமைச்சருமான எச்சரித்துள்ளார்.

அதிகரித்திருக்கும் சட்டவிரோத மணல் அகழ்வைக் கண்டித்து நேற்று முன்தினம் யாழ்ப்பாணம் மத்திய பஸ் நிலையத்துக்கு முன்பாகக் கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும்போத அவர் இதனைத் தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,

பூமி வெப்பமடைதல் காரணமாக கடல் நீர்மட்டம் உயர்ந்து வருகின்றது. யாழ்ப்பாணக் குடாநாடு பல கடல் நீரேரிகளைக் கொண்டுள்ளதால் குடாநாட்டுக்குள் கடல்நீர் புகும் அபாயம் இருப்பதாகவும் இதனால், ஆனையிறவுப் பகுதியில் துண்டிக்கப்பட்டு குடாநாடு தனித்தீவாகும் எனவும் சுழலியலாளர்கள் ஏற்கனவே எச்சரித்திருக்கிறார்கள்.

இந்நிலையில் இப்போது, நான் முந்தி நீ முந்தி என்று மணல் மாவ்பியாக்களால் மணற்கொள்ளை கட்டுப்பாடற்ற முறையில் மேற்கொள்ளப்படுவதால் கடல் நீர் உட்புகுந்து யாழ் குடாநாடு தனித்தீவாகும் அபாயம் மேலும் அதிகரித்திருக்கிறது.

மணல் அபிவிருத்திக்குத் தேவையான வளம் மாத்திரம் அல்ல நிலத்தடியில் நன்னீரைத் தக்கவைப்பதிலும் மணல் பெரும் செல்வாக்கைச் செலுத்துகிறது. மணல் மேடுகள் குறையக் குறைய நிலத்தடி நன்னீரின் அளவும் குறைந்து அவ்விடத்தைக் கடல்நீர் ஆக்கிரமிக்கின்றது. போரில் ஏற்கனவே பெரும் பாதிப்பைச் சந்தித்திருந்த எமக்கு மணல் ஏற்றும் வாகனங்களுக்கான அனுமதித் தடை நீக்கம் இப்படிப் பாரிய பிரச்சினைகளைத் தோற்றுவிக்கவுள்ளது.

அரசாங்கம் உடனடியாக மீளவும் மணல் ஏற்றுகின்ற வாகனங்களுக்கான அனுமதியைக் கட்டாயமாக்குவதோடு சட்டவிரோத மணல் அகழ்வுக்கும் முற்றுப்புள்ளி வைக்கவேண்டும். தவறும் பட்சத்தில் மணற்கொள்ளைக்கு எதிரான போராட்டம் விரைவில் மாகாணம் தழுவிய அளவில் விரிவுபடுத்தப்படும் என்றார்.