யாழ்ப்பாணத்தில் 2, 948 பேருக்கு தடுப்பூசி ஏற்றப்பட்டன – கிராமப் பகுதி மக்கள் பின்னடிப்பு

யாழ்ப்பாணத்தில் நேற்றைய தினம் கொவிட் தடுப்பூசி வழங்கல் திட்டத்தின் கீழ் 2 ஆயிரத்து 948 பேருக்கு சைனோபார்ம் தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன என வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

இந்த எண்ணிக்கை தெரிவு செய்யப்பட்ட கிராம அலுவலகர் பிரிவுகளில் மக்களின் எண்ணிக்கையில் 52 சதவீதமானோர் தடுப்பூசியை பெற்றுள்ளனர். இதன் மூலம் கிராமப் பகுதி மக்கள் தடுப்பூசி பெறுவதில் பின்னடிக்கின்றார்களா? என்ற கேள்வி எழுந்திருக்கின்றது.

சுகாதார அமைச்சின் தொற்றுநோய் தடுப்பு பிரிவின் வழிகாட்டல்களுக்கு அமைவாக யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கிராம அலுவலகர் பிரிவு ரீதியாக இனங்காணப்பட்ட கொவிட் – 19 நோயாளர்களின் எண்ணிக்கை மற்றும் சனத்தொகையின் அடிப்படையில் கணிப்பிடப்பட்டு 11 சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுகளை சேர்ந்த 61 கிராம அலுவலகர் பிரிவுகள் தெரிவு செய்யப்பட்டுள்ளன.

11 யாழ்ப்பாணத்தில் 2, 948 பேருக்கு தடுப்பூசி ஏற்றப்பட்டன - கிராமப் பகுதி மக்கள் பின்னடிப்புஇதன்படி 11 கிராம அலுவலகர் பிரிவுகளில் நேற்று கொவிட்-19 தடுப்பூசி வழங்கப்பட்டது. எதிர்பார்க்கப்பட்ட மக்கள் தொகையில் 52 சதவீதமானோர் தடுப்பூசியைப் பெற்றுள்ளனர்.

இதேவேளை தெரிவு செய்யப்பட்ட மேற்படி கிராம அலுவலகர் பிரிவுகளில் இன்று முதல் மேலதிகமாக 22 கிராம அலுவலகர் பிரிவுகளில் தடுப்பூசி வழங்கும் பணிகள் ஆரம்பிக்கப்படும்.

மேற்படி கிராம அலுவலகர் பிரிவுகளில் உள்ள 30 வயதுக்கு மேற்பட்ட கர்ப்பிணித் தாய்மார் தவிர்ந்த அனைவருக்கும் தடுப்பூசி வழங்கப்படும்.

தெரிவு செய்யப்பட்ட கிராம அலுவலகர் பிரிவு மக்களுக்கு அப் பிரதேசத்திற்குரிய சுகாதார மருத்துவ அதிகாரி பணிமனையினாலும், பிரதேச செயலகத்தாலும் அது தொடர்பான அறிவுறுத்தல்கள் வழங்கப்படும். அவ்வாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டவர்கள் தமக்கென ஒதுக்கப்பட்ட நேரத்தில் அடையாள அட்டை அல்லது தமது அடையாளத்தை உறுதிப்படுத்தும் ஏதாவது ஆவணத்துடன் அறிவிக்கப்பட்ட தடுப்பூசி வழங்கும் நிலையத்திற்கு வருகை தந்து தடுப்பூசியினை பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.