மோடி – கோத்தபயா சந்திப்பில் பிராந்திய நிலவரம் தொடர்பில் ஆய்வு

இலங்கை ஜனாதிபதி கோத்தபயா ராஜபக்ஸ இந்தியா சென்றடைந்தார். ஏ.என்.ஐ. செய்தி நிறுவனம் இத்தகவலை வெளியிட்டுள்ளது.

இது குறித்து  மேலும் தெரிவிக்கையில், “இலங்கை அதிபராக இம்மாதம் பதவி ஏற்றவுடன் முதல் வெளிநாட்டு சுற்றுப் பயணமாக இன்று(28) இந்தியா வந்தடைந்தார் கோத்தபயா ராஜபக்ஸ. டெல்லி விமான நிலையம் வந்தடைந்த அவரை மத்திய அமைச்சர் வி.கே.சிங் வரவேற்றார். மூன்று நாள் சுற்றுப் பயணமாக இந்தியா வந்துள்ள கோத்தபயா ராஜபக்ஸ நாளை பிரதமர் மோடியையும், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தையும் சந்திக்க உள்ளார்” என்ற செய்தி வெளியிட்டுள்ளது.

மோடி – கோத்தபயா ராஜபக்ஸ சந்திப்பில் பிராந்திய நிலவரம் மற்றும் இரு நாடுகள் உறவுகள் சார்ந்த முக்கிய ஆலோசனைகள் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

முன்னதாக, இந்திய சுற்றுப் பயணம் குறித்து தனது ருவிற்றர் பக்கத்தில் கோத்தபயா ராஜபக்ஸ குறிப்பிடுகையில், “இலங்கை – இந்தியா இரு நாடுகள் இடையே உள்ள இருதரப்பு உறவை வலுப்படுத்த பிரதமர் மோடியுடனான சந்திப்பை எதிர்நோக்கியுள்ளேன்” என்று தெரிவித்திருந்தார்.

சமீபத்தில் நடந்த இலங்கை அதிபர் தேர்தலில் சுமார் 54 சதவீதத்திற்கு் மேலான வாக்குகளைப் பெற்று பொதுஜன பெரமுன கட்சி வேட்பாளர் கோத்தபயா ராஜபக்ஸ வெற்றி பெற்றார். சுமார் 13 இலட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட சஜித் பிரேமதாசாவை கோத்தபயா ராஜபக்ஸ வெற்றி கொண்டார்.  வெற்றி பெற்ற கோத்தபயா ராஜபக்ஸவிற்கு இந்தியப் பிரதமர் மோடி தொலைபேசி வழியாக வாழ்த்துத் தெரிவித்தார். இந்தியா வருவதற்கும் அழைப்பு விடுத்தார். அதன் பேரில் கோத்தபயா ராஜபக்ஸ, மூன்று நாள் சுற்றுப் பயணமாக இன்று இந்தியா வந்தடைந்தார்.