மேய்ச்சல் நில விவகாரம் – முறைப்பாடுகளை பொலிஸார் கண்டுகொள்வதில்லை என குற்றச்சாட்டு

மேய்ச்சல் தரை பகுதியில் அத்துமீறிய பயிர்ச்செய்கையில் ஈடுபடும் சிங்கள மக்கள்,  தினமும் கால்நடை வளர்ப்பாளர்களை அச்சுறுத்திவருவதாக தெரிவிக்கும் பண்ணையாளர்கள், பொலிஸாருக்கு தெரியப்படுத்திய போதும் கவனம் எடுக்கவில்லை எனக் குற்றம் சுமத்தியுள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் பல பகுதிகளிலும் உள்ள கால்நடை வளர்ப்பாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து ஆராயும் விசேட செயலமர்வு  மட்டக்களப்பில் நடைபெற்றது.

 இதில்,மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூக அமைப்புகளின் ஒன்றியத்தின் தலைவர் எஸ்.சிவயோகநாதன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன்,அரசார்பற்ற ஒன்றியமான இணையத்தின் தலைவர் எஸ்.பாரதிதாசன், பாதிக்கப்பட்ட பண்ணையாளர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இந்த செயலமர்வில் கால்நடை பண்ணையாளர்கள் கருத்து தெரிவித்த போது,

மேய்ச்சல் தரைக்கு என ஒதுக்கப்பட்ட காணிகள் வேறு மாவட்டங்களை சேர்ந்தவர்கள் அத்துமீறி பயிர்செய்கை மேற்கொள்வதன் காரணமாக கால்நடை வளர்ப்பாளர்கள் தங்களது கால்நடைகளை மேய்ப்பதில் பெரும் கஸ்டங்களை எதிர்கொள்கிறோம்.

குறிப்பாக மேய்ச்சல் தரை பகுதியில் அத்துமீறிய பயிர்ச்செய்கையில் ஈடுபடுவோர் தினமும் கால்நடை வளர்ப்பாளர்களை அச்சுறுத்திவருவதாகவும்  பொலிஸாரின் கவனத்திற்கு கொண்டுசென்றாலும் இது தொடர்பில் போதிய கவனம் செலுத்துவதில்லை.

எதிர்காலத்தில் கால்நடை வளர்ப்பாளர்கள் பாரிய பிரச்சியை எதிர்கொள்ள நேரிடும் எனவும் எனவே அரசியல்வாதிகள் அனைவரும் இணைந்து தமது பிரச்சினைக்கு தீர்வினைப்பெற்றுத்தரமுன்வரவேண்டும்”. எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.