மேச்சல் நில விவகாரம் – நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

மட்டக்களப்பு மாவட்டத்தில் எல்லைப்பகுதியான மயிலந்தனை,மயிலத்தமடு பகுதியில் நடைபெறும் அத்துமீறல்கள் தொடர்பில் தற்போது முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளதன் காரணமாக தற்போதுள்ள முரண்பாடுகள் விரிவடையாமல் இருப்பதற்கு ஏற்கனவே எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கையினை துரிதப்படுத்தி விரைவான தீர்மானத்தினை எடுக்க மாவட்ட அபிவிருத்திக்குழு தீர்மானித்துள்ளது.

மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டம் இணைத் தலைவர்களான நாடாளுமன்ற உறுப்பினர் சிவநேசதுரை சந்திரகாந்தன்,கிழக்கு மாகாண ஆளுனர் அனுராதா ஜயம்பத் தலைமையில் இன்று நடைபெற்றது.

இன்றைய கூட்டத்தில் மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத்தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சந்திரகாந்தன்(பிள்ளையான்) பலத்த பாதுகாப்புடன் மாவட்ட செயலகத்தில் அபிவிருத்திக்குழு கூட்டத்தில் கலந்துகொண்டார்.

இந்த கூட்டத்தில் இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன்,மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியம்,கோவிந்தன் கருணாகரம்,கிழக்கு மாகாணசபையின் பிரதம செயலாளர் துஷித பி விஜயசிங்க, மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் க.கருணாகரன்,மட்டக்களப்பு மாநகரசபையின் முதல்வர் தி.சரவணபவன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

கூட்டத்தின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன், மட்டக்களப்பு மாவட்டத்தில்  பிரச்சினைகளுக்கு தீர்வினைக் காண வலியுறுத்தினார்.

குறிப்பாக மயிலத்தமடு,மாதவனை பகுதியில் முன்னெடுக்கப்படும் அத்துமீறிய பயிர்ச்செய்கை காரணமாக அங்கு கால்நடைவளர்ப்போர் பாதிப்புகளை எதிர்நோக்குவதுடன் எதிர்காலத்தில் இரண்டு சமூகங்களிடையே வேறு விளைவுகளை ஏற்படுத்தும் எனவும்   நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் சுட்டிக்காட்டினார்.

அதனை தொடர்ந்து கடந்த காலத்தில் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் மேற்கொள்ளப்படும் திட்டங்கள் தொடர்பிலும் எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படும் திட்டங்கள் குறித்தும் இங்கு விரிவாக கலந்துரையாடப்பட்டது.

அதனை தொடர்ந்து மயிலத்தமடு, மாதவனை பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடப்பட்டது. இது தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடுமையான வாதங்களை முன்வைத்தனர்.

மயிலத்தமடு,மாதவனை பகுதியில் சட்ட விரோதமான முறையில் சிலர் காணிகளில் சோளன் செய்கை மேற்கொள்வதாகவும் இதன் காரணமாக அப்பகுதியில் முரண்பாடுகள் இரு சமூகங்களுக்குள் ஏற்படும் நிலையுள்ளதாகவும் இங்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களினால் சுட்டிக்காட்டப்பட்டது.

2010ஆம் ஆண்டு தற்போதைய அபிவிருத்திக் குழுவின் தலைவரும் முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சராகயிருந்த சந்திரகாந்தனின் காலப்பகுதியிலேயே குறித்த பகுதி தொடர்பில் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டுசெல்லப்பட்டு அதற்கான குழு அமைக்கப்பட்டு குறித்த பகுதியை கால்நடை மேய்ச்சல் காணியாக வர்த்தமானிப்படுத்த பரிந்துரைசெய்யப்பட்ட காணிக்குள்ளேயே தற்போது சேனைப்பயிர்ச்செய்கை செய்யும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக  நாடாளுமன்ற உறுப்பினர் கோ.கருணாகரம் சுட்டிக்காட்டினார்.

எனினும் குறித்த பகுதியில் தேசிய கொள்கைகளுக்கு அமைவாகவே சோளன் செய்கை மேற்கொள்ளப்படுவதாகவும் அது ஒரு தேசிய நிகழ்ச்சி திட்டத்தில் முன்னெடுனக்கப் படுவதாகவும் இங்கு கிழக்கு மாகாண ஆளுனரினால் சுட்டிக்காட்டப்பட்டது.

எனினும் கால்நடை வளர்ப்போர் மாடுகளை மேய்க்கும் இடங்களில் அத்துமீறி இந்த வேலைத்திட்டங்கள் முன்னெடுப்பதை ஏற்றுக்கொள்ளமுடியாது எனவும் இதனை ஒரு திட்டமிட்ட காணி அபகரிப்பு செயற்பாடகவும் சட்ட விரோத செயற்பாடாகவும் காணப்படுவதனால் இதனை தடுத்து நிறுத்துவதற்கு மாவட்ட அபிவிருத்திக்குழு நடவடிக்கையெடுக்க வேண்டும் என  நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார்.

இதன்போது பல்வேறு வாதப்பிரதிவாதிகள் நடைபெற்ற போதிலும் மாவட்ட அபிவிருத்திக் குழுவின் தலைவரினால் எல்லைப்பகுதியில் நடைபெறும் அத்துமீறல்கள் தொடர்பில் தற்போது முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளதன் காரணமாக தற்போதுள்ள முரண்பாடுகள் விரிவடையாமல் இருப்பதற்கு 02ஆம் திகத கூட்டம் நடாத்துவதாக ஏற்பாடு செய்யப்பட்டு நிறுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கையினை துரிதப்படுத்தி விரைவான தீர்மானத்தினை எடுப்பது எனவும் தீர்மானிக்கப்பட்டது.