மூழ்க தொடங்கியது ‘எக்ஸ்பிரஸ் பேர்ல்’ கப்பல்; சுற்றுச் சூழலுக்குப் பாரிய அச்சுறுத்தல்

ஒரு மிகப் பெரிய சுற்றுச்சூழல் பேரழிவை ஏற்படுத்தும் என்று அஞ்சப்பட்ட இரசாயணப் பொருட்கள் நிரப்பப்பட்ட எக்ஸ்பிரஸ் பேர்ல் என்ற சரக்குக் கப்பல் கடலோர பகுதியில் மூழ்க தொடங்கியுள்ளது.

சிங்கப்பூரில் பதிவுசெய்யப்பட்ட எக்ஸ்பிரஸ் பெர்ல் (X-Press Pearl) என்ற இந்த கப்பல் சுமார் இரண்டு வாரங்களாக தீப்பற்றி எரிந்து வந்த நிலையில், தற்போது மூழ்க தொடங்கியுள்ளது.

இந்த கப்பல் முற்றிலும் மூழ்கும் பட்சத்தில் அதிலுள்ள சில நூறு டன் எண்ணெய் கடலில் கொட்டி அது கடல்வாழ் உயிரினங்களின் வாழ்வுக்கு அச்சுறுத்தல் விளைவிக்கக்கூடும்.

இலங்கை மற்றும் இந்திய கடற்படைகள் கடந்த சில நாட்களாக கூட்டாக இணைந்து தீயை அணைக்கும் பணியிலும், கப்பல் உடைந்து மூழ்குவதைத் தடுக்கும் முயற்சியிலும் ஈடுபட்டன.

இந்த நிலையில் இந்தக் கப்பலை நடுக்கடலுக்கு இழுத்துச் சென்று விடுவதற்கான முயற்சசிகளும் பலனளிக்கவில்லை எனத் தெரிகின்றது.