கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள ஐந்து தனிமைப்படுத்தல் நிலையங்களில் தங்க வைக்கப்பட்டவர்களுக்கான மருத்துவ பரிசோதனைகள் நிறைவு பெற்றுள்ளதாக கிளிநொச்சி பிராந்திய தொற்று நோயியல் வைத்திய அதிகாரி நிமால் அருமைநாதன் தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,
நாடளாவிய ரீதியில் கொரோனா தொற்று தொடர்பான சந்தேகத்தில் தனிமைப்படுத்தல் மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்கள் உரிய பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு படிப்படியாக விடுவிக்கப்பட்டு வருகின்றனர்.
இரணைமடு விமானப்படை முகாமில் 175 பேரும் இயக்கச்சியில் 55வது படைப்பிரிவு இராணுவமுகாமில் 80 பேரும் இயக்கச்சியில் 12வது படை இராணுவ முகாமும் 160 பேரும் முழங்காவில் கடற்படை முகாமில் 60 பேரும் முழங்காவில் இராணுவமுகாமில் 60 பேரும் தங்க வைக்கப்பட்டு மருத்துவ பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
மேற்படி தனிமைப்படுத்தல் மையங்களில் தங்க வைக்கப்பட்டவர்களில் முழங்காவில் பகுதியில் உள்ள கடற்படைமுகாமில் இருந்து நோய்த் தொற்றுக்குள்ளான நிலையில் 7 பேர் இனங்காணப்பட்டுள்ளனர். இது தவிர மாவட்டத்தில் இருந்து எந்தஒரு நோயாளியும் இனங்காணப்பட்டவில்லை. இதுவரையும் பாதுகாப்பான ஒரு மாவட்டமாக கிளிநொச்சி மாவட்டம் உள்ளது என்றார்.