இனப்படுகொலை வாரத்தின் இரண்டாம் நாள் நினைவேந்தல் நிகழ்வுகள் பல இடங்களிலும் தனிப்பட்ட முறையில் நடைபெற்றுள்ளன. நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா நிலைமைகள் காரணமாக நினைவேந்தல் வாரத்தில் சுகாதார நடைமுறைகளுக்கு அமைவாக அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்று வருகிறன.
அந்த வகையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தின் இரண்டாவது நாளான இன்று(13) முள்ளிவாய்க்கால் முற்றத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் சட்டத்தரணி காண்டீபன், சட்டத்தரணி சுகாஸ் உள்ளிட்டவர்கள் சுடரேற்றி அகவணக்கம் செலுத்தி அஞ்சலி நிகழ்வை மேற்கொண்டனர்
மேலும் முல்லைத்தீவில் பிரத்தியேகமாக ஒழுங்கு செய்யப்பட்ட இடத்தில் உயிரிழந்த உறவுகளுக்கு அகவணக்கத்துடன் ஈகைச் சுடர் ஏற்றி அஞ்சலிக்கும் நிகழ்வு இன்று (13) நடைபெற்றது.
இந்நிகழ்வு முல்லைத்தீவு மாவட்ட இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினரும், சமூக ஆர்வலருமாகிய பீற்றர் இளஞ்செழியனால் முன்னெடுக்கப்பட்டது.
பாதுகாப்பு கெடுபிடிகளுக்கு மத்தியில் இந்த அஞ்சலி நிகழ்வு பிரத்தியேகமான இடத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் கலந்து கொள்வதற்கு பீற்றர் இளஞ்செழியனுக்கு நீதிமன்ற தடை உத்தரவு பொலீசாரினால் பெறப்பட்டு அவரின் கையில் வழங்கும் நடவடிக்கையில் முல்லைத்தீவு பொலீசார் ஈடுபட்டுள்ளனர்.