முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்: கைது செய்யப்பட்ட 10 பேரை விளக்கமறியலில் வைக்க உத்தரவு

மட்டக்களப்பு கல்குடா  காவல்துறை பிரிவிலுள்ள நாகர்வட்டை கடற்கரையில் முள்ளிவாய்க்காலில் உயிரிழந்தவர்களுக்கு கடந்த 18 ம் திகதி   சுடர் ஏற்றிய சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட 10 பேரையும் எதிர்வரும் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு  வாழைச்சேனை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 18 ம் திகதி நீதிமன்ற தடை உத்தரவை மீறி கல்குடா காவல்துறை பிரிவிலுள்ள நாகர்வட்டை கடற்கரையில் முள்ளிவாய்க்காலில் உயிரிழந்தவர்களுக்கு தீபச் சுடர் ஏற்றி கடலில் பூக்களைத் தூவி அஞ்சலி செலுத்திய அதனை படம் எடுத்து முகநூலில் பதிவு செய்த 10 பேரை பயங்கரவாத தடைச் சட்டத்தின்கீழ்  காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.

குறித்த நினைவேந்தல் நிகழ்வை தலைமை ஏற்று நடத்தியிருந்த லவக்குமார், 10 பேருடன் சென்று நாகர்வட்டை கடற்கரையில் முள்ளிவாய்க்காலில் உயிரிழந்தவர்களுக்கு தீபச்சுடர் ஏற்றி அதன் பின்னர் பூக்களை கடலில் தூவி அஞ்சலி செய்திருந்தார். மேலும் இந்நிகழ்வை  இதனை படம் எடுத்து முகநூலிலும் பதிவேற்றம் செய்திருந்தனர்.

இதையடுத்து குறித்த 10 பேரும் கைது செய்யப்பட்டனர். இதைத் தொடர்ந்து கைது செய்யப்பட்டவர்களை 3 நாள்  காவல்துறை தடுப்பு காவலில் வைத்து விசாரணை மேற்கொள்ள நீதிமன்ற அனுமதியினை பெற்று தடுப்பு காவலில் வைத்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், நேற்று முன்தினம்   வாழைச்சேனை நீதவான் நீதிமன்ற நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தியபோது அவர்களை 14 நாட்டகள் விளக்கமறியில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.