முள்ளிவாய்க்காலில் மரணித்த மக்களை நினைவு கூருவது எங்களின் அடிப்படை விடயம் – அருட்தந்தை சின்னத்துரை லியோ ஆம்ஸ்ரோங்

“முள்ளிவாய்க்கால் பகுதியில் கொல்லப்பட்ட எமது மக்களை நினைவு கூருவதை தடுக்கின்ற  நிலையிலிருந்து நாங்கள் முன்னேறிச் செல்ல வேண்டி இருக்கிறது” என நினைவேந்தல் குழுவின் வடகிழக்கு பொதுக் கட்டமைப்பின் இணைத் தலைவரும், தமிழர் மரபுரிமை பேரவையின் இணைத் தலைவருமான, அருட்தந்தை சின்னத்துரை லியோ ஆம்ஸ்ரோங் தெரிவித்தார்.

முள்ளிவாய்க்கால் இன அழிப்பு நினைவேந்தல் தொடர்பாக ‘இலக்கு’ மின்னிதழிற்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்,

அவர் மேலும் தெரிவிக்கையில்,

முப்பது ஆண்டுகாலப் போர் முடிவடைந்து, பனிரெண்டு ஆண்டுகளைக் கடந்து போகிற நிலையிலே, முள்ளிவாய்க்கால் பகுதியிலும், அதை அண்டிய பகுதிகளிலும், இறுதிப் போர்க் காலங்களிலே கொல்லப்பட்ட மக்களை நினைவுகூரும் அந்த நாள் மிக அண்மித்துக் கொண்டிருக்கிறது.

எதிர்வரும் பதினெட்டாம் நாளிலே, இந்த மண்ணில் கொல்லப்பட்ட மக்களை நினைவு கூருகின்ற அந்த நாள், இந்த கொரோனாவினுடைய பரவல் அதிகரித்திருக்கின்ற சூழ்நிலையிலே எம்மை அண்டிவர இருக்கிறது.

கனத்த இதயங்களோடு தான் இந்த நினைவு கூருதலை நாங்கள் சந்திக்கின்றோம். எம்மை சூழ இந்த கொரோனாவின் தாக்கம் அதிகமாகி வருகின்றது. அத்துடன் எமது அயல் நாடாகிய இந்தியா அதிகம் பாதிக்கப்பட்டிருக்கிறது. மேலும் முழு உலகமும், இந்த கொரோனா அலையினுடைய வேகத்தைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரக்கூடிய மருந்துகள் தொடர்பாகவும், இவற்றிற்கு பின்புலத்தில் இருக்கக்கூடிய புதிய அரசியல் வியாபார நிலைகளுக்கும் மத்தியிலேயே தான், நாங்கள் இந்த பன்னிரண்டாவது ஆண்டை நினைவு கூருகின்றோம்.

அண்மையிலே கடந்த புதன்கிழமை (12) இரவு வழமையாக நாங்கள் நினைவு கூருகின்ற முள்ளிவாய்க்கால் கிழக்கு பகுதியில் அமைந்திருக்கின்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பகுதி உடைக்கப்பட்டு, அழிக்கப்பட்டிருக்கின்றது. அதனுடைய ஒரு தூண் சரித்து வீழ்த்தப்பட்டிருந்தது. இருந்த கைகள் முறித்து எறியப்பட்டிருந்தன. இது இரண்டாயிரத்தி ஒன்பதாம் ஆண்டு அந்த பகுதி முழுவதும் சிதறடிக்கப்பட்ட எமது உறவுகளினுடைய உடலங்களை நினைவூட்டுவதாக அமைகின்றது.

கடந்த காலங்களிலே இந்த முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் அஞ்சலி நிகழ்வுகளை முன்னெடுப்பதில் ஒருசில குழப்பங்கள் இடம்பெற்று வந்துள்ளன. கடந்த இரு ஆண்டுகள் நாங்கள் முள்ளிவாய்க்கால் பொதுக் கட்டமைப்பு ஒன்றை உருவாக்கியதன் பின்னர் இரு ஆண்டுகளிலும் நினைவேந்தல் நிகழ்வுகள் சுமுகமாக நடைபெற்றுள்ளன. இந்த வருடமும் பொதுக் கட்டமைப்பு ஊடாகவே நிகழ்வுகள் முன்னெடுக்கப்படும். இந்த பொதுக் கட்டமைப்பை உருவாக்குவதில் அனைத்து சமூகத் தரப்பினரும் எமக்கு ஒத்துழைப்பு வழங்குகின்றனர். இனியும் வழங்குவார்கள்.

இந்தக் கட்டமைப்பு உருவாகிய சில காலத்தின் பின்னர் 2019ஆம் ஆண்டு ஈஸ்டர் குண்டு வெடிப்பு நிகழ்ந்தது. 2020ஆம் ஆண்டு கொரோனா தாக்கம் ஏற்பட்டது. இந்த நெருக்கடிக்குள்தான் நிகழ்வுகள் நடத்தப்பட்டன. இம்முறையும் அதே போன்றதொரு நெருக்கடியில் நாம் உள்ளோம்.

பல தசாப்தங்களாக தமிழின மக்களாகிய நாங்கள், சிங்கள அடக்கு முறையினரால் இவ்வாறு பல்வேறு அசௌகரியங்களை சந்தித்த வண்ணம் தான் இருக்கிறோம்.  தமிழாராய்ச்சி படுகொலை, அதற்கான நினைவு கூருதல்கள் தடுக்கப்படுதல், நூலகம் எரிக்கப்படுதல், இது போன்ற பல நிகழ்வுகள் எமது கடந்தகால வரலாற்றிலே இருக்கின்றது.  எமது மக்கள் கட்டமைக்கப்பட்ட ஒரு இனப்படுகொலை ஒன்றிற்கு ஊடாக கடந்து சென்று கொண்டிருக்கின்றனர் என்பதை யாரும் மறுக்க முடியாது.

இரண்டாயிரத்தி ஒன்பதாம் ஆண்டுக்கு பின்பும் பல்வேறு விதமான நிலைகளிலே அரசு இயந்திரம், மக்கள் மீது இவ்வாறான தொடர்ச்சியான, தொடரான பல அடக்கு முறைகளை ஏற்படுத்திக் கொண்டு தான் இருக்கிறது.

ஆகவே, இந்த நிலையிலும் நாங்கள்  பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன், முள்ளிவாய்க்கால் பகுதியில் கொல்லப்பட்ட எமது மக்களை நினைவு கூருவது என்பது எமது தார்மீக கடமையாக இருக்கிறது.

 இந்த நினைவு கூருதலை தடுக்கின்ற அந்த நிலையிலிருந்து நாங்கள் முன்னேறிச் செல்ல வேண்டி இருக்கிறது. நிச்சயமாக இந்த நினைவு கூரப்படுகின்ற அந்த பகுதி சிதைக்கப்பட்டமைக்கு எதிராக உலக தலைவர்களும், மக்களும் கண்டனங்களை எழுப்ப வேண்டும். அது மீள கட்டப்படக் கூடிய வகையில் பலரும் இதற்கு ஒத்துழைப்புத் தர முன்வர வேண்டும் என்பதை இந்த வேளையிலே நாங்கள் கோரிக்கையாக முன்வைக்கின்றோம்.

கொரோனாவின் பரவலின் காரணமாக மக்கள் அனைவரும், இந்த நினைவு கூருதலை, தங்களுடைய இல்லங்களில் இருந்து மேற்கொள்ளுமாறு, அன்புரிமையோடு கேட்டுக் கொள்கிறோம்.

சிறப்பாக, ஒவ்வொருவரும் தங்கள் பிரதேசத்தில் இருக்கின்ற அனைத்து ஆலயங்களிலும், மாலை ஆறு மணிக்கு மணிகளை ஒலிக்கச் செய்து, மக்கள் அனைவரும் குடும்பமாக, ஒரு அகவணக்கத்தை செலுத்தும்படியும்,  சுகாதார நடை முறைகளை பின்பற்றி, அக வணக்கத்திலே பங்கெடுத்து, விளக்கொன்றை ஏற்றி, இறந்தவர்களுக்காக பிரார்த்தனை செய்யுமாறும் அழைக்கின்றோம்.

அத்தோடு அன்றைய நாளிலே, ஒரு நேர உணவாக, முள்ளிவாய்க்கால் கஞ்சியை உணவாக உட்கொள்ளுமாறும் நாங்கள் கேட்டுக் கொள்கிறோம். இதன் ஊடாக, அந்த மக்களுடைய வலியையும், துன்பத்தையும் நாங்களும் சுமந்து, அதை கடந்து செல்லவும், கடத்திச் செல்லவும், வாய்ப்பாக இருக்கும் என நம்புகின்றோம்.

ஆகவே, இந்த விடயத்தை நாங்கள் அனைவரும் நினைவு கூருவோம். நினைவு கூருதல் என்பது, எங்களுடைய அடிப்படை விடயமாக இருக்கிறது. இதை அனைவரும் இணைந்து நினைவு கூருவதன் ஊடாக, நாங்கள் இன்னொரு தளத்துக்கு, எங்களுடைய வாழ்வை, எமது மக்களை, எங்களுடைய எதிர்காலத்தை, நகர்த்திச் செல்ல முடியும் என எண்ணுகின்றோம்.” என மேலும் தெரிவித்தார்.