முல்லையில் பயணக்கட்டுப்பாடு- வளச் சுரண்டல்கள் இடம்பெறுவதாக ரவிகரன் குற்றசாட்டு

கொரோனா பயணக்கட்டுப்பாட்டுக் காலங்களில் முல்லைத்தீவு மாவட்டத்தின் சில இடங்களில், வளச் சுரண்டல்கள் இடம்பெறுவதுடன், அதிகளவில் ஒன்றுகூடுவது மற்றும் வெளி மாவட்டங்களிலிருந்து வருகைதருவதென பல நிகழ்வுகள் பதிவாகிவருகின்றன என முன்னாள் வடமாகாணசபை உறுப்பின துரைராசா ரவிகரன் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதுதொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

“தற்போதுள்ள கொவிட் -19 அசாதாரண நிலை காரணமாக நாட்டின் சகல பகுதிகளுக்கும் பயணக்கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் இந்த பயணக்கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட காலங்களில் அத்தியாவசிய தேவைகளுக்கு மாத்திரம் வெளியே செல்லமுடியுமென நாட்டின் பாதுகாப்புத் தரப்புக்களும் சுகாதாரத் தரப்புக்களும் மக்களுக்கு அறிவுறுத்தி வருகின்றார்கள்.

இவ்வாறிருக்கும் போது இந்த பயணக்கட்டுப்பாட்டுக் காலங்களில் முல்லைத்தீவு மாவட்டத்தின் சில இடங்களில், வளச் சுரண்டல்கள் இடம்பெறுவதுடன், அதிகளவில் ஒன்றுகூடுவது மற்றும் வெளி மாவட்டங்களிலிருந்து வருகைதருவதென பல நிகழ்வுகள் பதிவாகிவருகின்றன.

குறிப்பாக முல்லைத்தீவு – தியோகுநகர் பகுதியில் இந்த பயணக்கட்டுப்பாட்டுக் காலங்களில் கடற்கரையோர மணல் திட்டுக்கள் மற்றும் காணிகளிலுள்ள மணல் தொடர்ச்சியாக அகழப்பட்டு வளச் சுரண்டல்கள் இடம்பெறுகின்றன. இது தொடர்பில் அப்பகுதிமக்கள் என்னிடம் தெரியப்படுத்தியுள்ளனர்.

இவ்வாறு கடற்கரையோர மணல் திட்டுக்கள் அகழப்படுவதால் தமது குடியிருப்புப் பகுதிக்குள் கடல்நீர் உட்புகுந்துவிடுமோ என்ற அச்சம் அம்மக்களுக்கு இருக்கின்றது.

இது தொடர்பிலே அம் மக்கள், கிராம அலுவலரிடமும் தெரியப்படுத்தியுள்ளனர். அதற்கமைய கிராம அலுவலர் இது தொடர்பிலே ஆராய்ந்துள்ளார்.

இந்நிலையில் அங்கு மணல் அகழ்வில் ஈடுபடுபவர்கள் மணல் அகழ்விற்கென தம்மால் பெறப்பட்ட அனுமதிப்பத்திரத்தினை கிராம அலுவலரிடம் காண்பித்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

தற்போதுள்ள அசாதாரண நிலையில் அத்தியாவசிய தேவைகளுக்கே வெளியே மக்கள் செல்லலாம் என பாதுகாப்பு மற்றும் சுகாதாரத் தரப்புக்கள் கூறுகின்றன. இந்நிலையில் இந்த பயணக்கட்டுப்பாட்டுக் காலத்தில் இவ்வாறான வளச்சுரண்டல்கள் அத்திய அவசியமானதா?

பயணக்கட்டுப்பாடு நடைமுறையில் உள்ள இக்காலத்தில் இவ்வாறான வளச்சுரண்டல்களுக்கான அனுமதிகளை வழங்கியது யார்?

மேலும் போலீசார் அங்கு இருக்கும்போதே மணல் அகழ்வுச்செயற்பாடுகள் இடம்பெற்று வருவதாகவும் அப்பகுதிமக்கள் தெரிவிக்கின்றனர்

இதே போலதான் கொக்கிளாய் முகத்துவாரம் பகுதியிலுள்ள சுருக்குவலை போன்ற சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகளில் ஈடுபடுகின்ற தென்னிலங்கையைச்சேர்ந்த மீனவர்கள் கடற்கரையிலே காலை மற்றும் மாலைவேளைகளில் அளவிற்கு அதிகமாக ஒன்று கூடுவதாக அங்குள்ள எமது மக்களால் தெரிவிக்கப்படுகின்றது.

இதில் கவனஞ்செலுத்தவேண்டிய சுகாதாரத் தரப்பினரும், பாதுகாப்புத் தரப்பினரும் இந்த நடவடிக்கைக்குத் துணைபோகின்றனரா?

இதனைவிட இந்த பயணக் கட்டுப்பாட்டுக் காலங்களிலும் தென்னிலங்கையைச் சேர்ந்த மீனவர்கள் பலரும் முல்லைத்தீவு மாவட்டத்திற்கு வருகைதருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறான வெளிமாட்டத்தைச் சேர்ந்தவர்களின் வருகையினைக் பாதுகாப்புத் தரப்பினர் கட்டுப்படுத்தவேண்டும்.

மேலும் இந்த பயணக்கட்டுப்பாடு நடைமுறையில் உள்ள காலங்களில் இடம்பெறும் இந்த வளச்சுரண்டல்கள், அளவிற்கு அதிகமாக ஒன்றுகூடுவது மற்றும் வெளிமாவட்டத்தில் இருந்து வருகைதருவது போன்ற விடயங்களைக் கட்டுப்படுத்துவதற்கு உரிய தரப்பினர் விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும்” என்றார்.